Tuesday, March 1, 2016

ஜீவனின் நடை

ஜீவனின் நடை தொடர்கிறது உலகில். 
அதனுள்ளே உயிரூக்கம், அருளின் ஆதி சங்கேதம் இயங்கினாலும் 
அதன் சுயேச்சை என்பது அகங்காரத்தின் வழி பயின்று 
பல தடங்களில் சென்று 
காலடிகள் பொறியுண்டு வாடுகின்றன. 
உலகில் உலப்பிலா நேயம் இல்லை 
என்று அது உணரும் ஒவ்வொரு கணமும் 
அதன் கண்கள் தன் ஆதி புகலைத் தேடித் தவிக்கின்றன. 
பின் மறதி. பின் உயிர்ப்பு. மாறி மாறி நுகத்தடி ஆட்டம். 
இந்த ஆட்டத்தில் சோர்ந்து அருளுக்கு ஏங்கி 
இந்த உயிர் குடிப்பதோ இருளின் புன் மடிப் பால். 
யார் இருக்கின்றார்? யார் இறக்கின்றார்?
இவ்வாறு கேள்வி கேட்பது யார்? 
திக்கு, திசை, தான், எதுவும் தெரியாத 
இந்தத் தனிமைக்கே இந்த உயிரை விற்றவள் 
நிச்சயம் ஒரு பிச்சியாய்த் தான் இருக்க வேண்டும். 
தான் பெற்றதையே 
தானும் தன்னையும் அறியாத் தனிமைக்கே 
வேறு யார் விற்பார்? 
அந்த அளவிற்கு துச்சமாகிப் போனது 
எந்த விலை பெற்றிருக்கும்? 
வெறும் தவிட்டிற்கு அல்லாமல். 
எந்தப் பிச்சிக்கும் ஒரு நாள் கொஞ்சம் பித்து தெளியும் அன்றோ! 
அன்று எங்கு நான் உள்ளேன்? 
என் நான் செய்தேன்? 
எங்கு என் குழந்தை? 
என்று ஒரு கணமேனும் பிரமை கலைந்து 
பார்வை நெட்டுக்குத்த நிற்காதா? 
அன்று தன் அருள் எல்லாம் பொங்க 
அருளை வேட்பார் யாருமின்றி 
வெறிதே தன்னை நோகச் செய்யும் அருள் பெருக்கைத் 
தன் நோவு தீரத் தரையில் பாய்ச்சும் கோல் விழுக்காட்டில் 
அந்த அருள் என்னை உய்விக்கட்டும். 
அந்த சத்தி நிபாதம் ஆகிய அருள் வீழ்ச்சியில் 
ஒரு ஜீவனின் உயிர் தாகமானது தீரட்டும் 

***