Sunday, October 31, 2021

பொற்சேவல்

நள்ளிரவு பன்னிரண்டு 
தூங்காத விண்மீன்கள் இமைத் துணையாய் 
மேல்மாடிக் காரை படுத்தயர்ந்த நிசப்தத்தில் 
தெருக்கோடிக் குழந்தை தேம்பும் ஒலித்தெளிவில் 
திப்பி பிதிர்ந்து இருள் புரளும் ஒளிக்கீற்றும் 
ஓய்ந்துறங்கும் உள்ளிரவின் மடியேந்தி 
உரத்த குரலாய் ஆர்த்த இதயத் துடிப்பு 
உட்செவி சாய்ந்து உயிரில் கனவேறி 
வெளியில் இவர்ந்து வந்த பதிவிறக்கிக் 
கொட்டிக் கவிழ்த்துக் கிளறிப் புரட்டிக் 
கூடாக் கூட்டில் கொண்டு புலர்த்திச் 
சிறுசிறு கனவுத் தூள்கள் உருட்டி 
இருளின் மடி கனத்த கடையாமம் 
உயிரூற உணர்வெழுந்து உரத்த விழிப்பில் 
ஊர்துயின்ற தாலாட்டில் ஊறிவரும் 
காற்றின் முதுகேறிக் 
கொள்ளிடத்துப் படித்துறையில் 
கொண்டு சுழித்தோடிவரும் 
குளிநீர் குடைந்தாடி 
வெள்வரைப்பின் முன்னெழுந்த ஊரசைவில் 
பட்டுவிடாது பாங்காய்த் திரும்பிவர 
நின்றேனை நீளுலகு 
நின்றறியக் கூவிடுமால் 
பொற்சேவல் 

***

பகலின் பாமரத்தனம்

பகலின் பாமரத்தனம் முடிந்து 
மாலையின் பௌராணிகம் 
இரவிற்குச் சுவையூட்டியது 
வேர்வை ஆற்றுநீரில் போக 
வேறொரு காலம் விழித்தது 
இரவின் இருள்தான் என்ன மாயம்! 
மொட்டைக் கம்பம் முனியாகிப் 
பட்டைச் சாராய பதக்கேந்திப் 
பனைமர நீளத்தில் புகைச்சுருட்டு பிடித்தபடி 
ஆறடிச் சந்தின் மதிற்சுவரில் ஒரு காலும் 
மரத்தின் ஆகாயக் கிளையில் ஒரு காலும் வைத்துக் 
கனலும் விழியுருட்டிக் 
கிணற்று மேடைச் சொம்பின் ஒளித்தெறிப்பில் 
கோபமாகிக் கொள்ளிவாய்த் திறந்து 
உறுமத் தொடங்குமுன் 
ஓடிவந்து உள்ரேழி விழுந்து 
சாத்தாத கதவிடுக்கில் 
சங்கிலி எட்டிப் பார்க்க 
விட்டத்தில் கள்ளுண்டுத் தலைகீழாய் விரைந்தாடும் 
கருப்பு மோந்து பார்த்த கிலியில் 
குரல்வளை தேய்ப்புண்டு 
ஓலம் ஒரு கிரீச்சலாகி 
உடலில் ஒரு வேர்வை ஆறும் 
மந்திரிக்க வேப்பிலைக் கொத்தும் 
அப்புச்சா ஆட்டத்தில் 
மலையேறிய கோட்டை முனி 
நாளை இரவும் வரலாம் 
அதுவரையில்... 
அப்பாடா.. பகலின் பாமரம் 

***

வடம் பிடிக்க வாருங்கள்

இடம் பிடிக்க வேண்டுமெனில் 
வடம் பிடிக்க வாருங்கள் 
அரங்கன் தேர் அசைகிறது 
ஒப்பனையாய் வைத்த பரி 
ஒய்யாரப் பாய்ச்சலில் 
ஊரெல்லாம் கூடிவந்த ஒத்துழைப்பில் 
ஊமையின் உதடசையும் 
ஊன்றுவிழி இமையசையும் 
ஊர்க்கோடி முக்கினிலே முட்டடித்து 
மூங்கில் கழி கெட்டித்து 
மூலப் பெரும் பாழை 
முக்காலக் கோலடித்து 
மூண்ட படைப்பின் மூலச்சுருதி வாங்கி 
மூச்சடங்கிப் பேச்சடங்கி 
மூளும் உயிரடங்கி 
மேல் வார்த்த தோலின் ஆர்ப்படங்காக் 
கார்வைதொனி தானசையும் 
அடிவயிற்றில் மூச்செடுத்து 
அண்டத்தின் வேரை 
ஆதிமுதல் அடிபோட்டு 
அந்தத்தை முடிபோடும் 
அழியாத விதியை 
ஆர்த்துவரும் தாம்பிழுத்துக் 
குலநீர்மை ஒன்றாகிக் 
கூடியெழும் கோவிந்தா குரல்முழக்கில் 
கொட்டும் வேர்வையினில் 
குடமுழுக்கு ஆன குலம் ஒன்றாய் 
அரங்கன் தேர் அசைகிறது 
அவன் கிடந்த மண்ணில் 
ஆற்றின் இடைக்குறையில் 
ஆய்ச்சிக் கைத் தாம்பிற்கு 
அஞ்சி அச்சுதனார் 
ஆயிரவாய் அரவணைப்பில் 
அறிதுயிலும் அரங்கத்தில்... 

***

ஆடுங் கூத்து

மூலைத் தெருவில் 
மாலை மயக்கில் முடுகும் சந்தில் 
பொட்டு கட்டியது பரமனுக்கு. 
பொங்கும் பரிவு மனிதனுக்கு 
பொருளில் அக்கறை வயிற்றிற்கு 
கருவின் கனவுகள் சொர்க்கத்திற்கு 
நட்டுவாங்கம் நடைமுறை வாழ்க்கை 
தாளகதியும் சொற்கட்டும் 
பதவிந்நியாசமும் அபிநயமும் 
பாவச் சொடுக்காய் அடவுகளும் 
பாவை பயிர்ப்பில் படிந்துவர 
பங்கஜதள நேத்ரம் 
ஸரோஜ ஹஸ்தம் 
கமலச் செங்கனிவாய் 
அன்றலர்ந்த பதுமத் திருமுகம் 
மொட்டவிழா முளரி மிடைத்தன்ன மென்முலை 
தண்டாமரை தடமொத்தும் செவ்வடி 
புற்றரவல்குல் 
புனைமயில் 
கற்றுக்கறவை படுகாடு கிடந்தன்ன 
கலைவிரி மேகலை 
அலைபயில் ஜதிகள் 
கண்டார்மனம் செண்டெனக் 
கைக்கொண்டவை விண்டவை 
தண்டைப்பதமென 
அண்டபகிரண்ட நாயகன் அடியாள் 
ஆடுங்கூத்தில் 
குழந்தையின் அழுகையும் 
தாயின் ஏக்கமும் 
அழுந்திக் கிடந்ததை 
அறியும் பரம்பொருள் 

***

குளிரில் போர்த்திய சிவன்

வழிநெடுக வெள்ளம் 
நெஞ்சங்களின் கனம் ஏற ஏறப் 
பேருந்து ஊர்ந்து சென்றது 
பாட்டியம்மையில் தொடங்கிய பயணம் 
பிரளயத்திற்கு அச்சாரம் ஆகியது 
காவிநீர்ப் பெருக்கின் 
சூறைக் காற்றில் 
உறவின் மரங்கள் 
மனஸ்தாப விறகுகள் ஆயின 
நம்பிக்கை விண்மீன்கள் 
ரேஷன்கடை பல்புகள் ஆகி 
யதார்த்தம் பேசின. 
கரைகட்டாக் காவிரி 
வீட்டுப் படிக்கட்டில் 
அலைகட்டி நின்றது 
முதுகில் சார்த்தி வைத்திருந்த 
பாச மூங்கில்கள் உலர்ந்து பற்றிக் கொண்டன 
கண்ணுக்குப் புலனாகாத 
உறவின் மின்சார இணைப்புகள் 
தம்முள் குறுக்கு வெட்டில் 
பாய்ந்து வெடித்தன 
குளிரில் நடுங்கியவனுக்குக் 
கொல்புலித்தோல் போர்த்திவிட்டுப் 
போன சிவன் எங்கே? 

*** 

சொல்லின் நளினம்

வலிய இழுத்து 
மேல் விழுந்து 
வேகம் தணிந்து விரைவது என்னே 
சொல்லின் முகம் சுளிப்ப?... 
சொல்லுக்கும் 
கச்சும் கொய்சகமும் உண்டு 

***

பிஞ்ஞகனார்க் குறுநகை

நெற்றிக்கண் நெருப்புமிழ் கங்குக் கழி 
நேரெதிர்ந்ததனைத்தும் எரித்தூடு 
உள்ளுருவிப் புகும் திசையில் 
உறுதடத்து உசாவியெழும் 
அலைச்செதில்கள் மட்டித்துக் 
கருவான் நிறங்கலந்து 
கண்ணொளி தளிர்புனைந்து 
வெருவுதரு எரிதழலின் 
விம்ப உரு எதிரொளிர்த்துப் 
பெயர்தருமோர் புனலருவி 
பிறங்குகள் இடைதழுவிப் 
பெட்புறக் கடந்ததுவால் 
பிஞ்ஞகனார்க் குறுநகையாய் 

*** 

Thursday, October 28, 2021

தரிசனம்

வரிசையில் நின்று 
தரிசனம் ஆன 
மண்டபத்தில் 
கடவுள் அர்ச்சகர் 
பெண்கள் என்ற 
முக்கோணத்தில் சுழலும் தரிசனம் 
ஆன்மிகம் லௌகிகம் 
ஒன்றின் வால் ஒன்றின் வாயில் 
தட்டில் போட்ட பணத்தின் சத்தம் 
தட்டியைத் தாண்டியதும் 
கேள்வியாய் எழுந்து 
இறைவனைக் கேட்டது 
எது நீர்? 
காய்ந்த வயிறா ஐம்பொன் சிலையா 

***

உயிர் விஸ்தாரத்தின் உணர்வு

எங்கோ எவரோ எப்பொழுதோ 
ஏன் என்ற கேள்விக்கு 
விடைதர வேண்டி 
எவ்வாறோ எக்கருத்தோ எம்மொழியோ 
எவர்க்கோ உரைக்க 
அவையெல்லாம் 
அன்றிலிருந்து இன்றுவரை 
இனி என்றோ அன்றும் வரை 
நின்று நிலைத்திடினும்.. 
நீள் புவியும் நெடுங்காலத்து ஓர் கணமும் 
உள் நின்ற உயிர் விஸ்தாரம் 
உணர்கின்ற அர்த்தம் என்ன? 

***

Wednesday, October 27, 2021

மகிழ்வின் தேனடை

கூடத்து மேல் சன்னல் 
பக்கச் சார்பின் தகரத்தில் 
கொட்டி ஆற்றுகிறது 
ஊர்க்கவலையெல்லாம் 
நள்ளிரவில் மழை. 
பார் பார் என்று 
பிரபஞ்சத்தின் லாந்தர் விளக்கை 
ஏற்றத் துடிக்கிறது மின்னல் 
போர்வையை இழுத்துப் படு என்ற 
அப்பன் கண்டிப்பில் 
தெருவில் ஓடும் நீர்ப்பெருக்கு 
கனவில் கரை உடைகிறது 
காலையில் எழுந்ததும் 
காற்றில் துள்ளிவரும் முதல் அறிவிப்பு: 
பள்ளி விடுமுறை 
மழையே! நீ வாழி! 
பல் தேய்க்காமல், காப்பிக் கவலையின்றிப் 
பக்கம் பக்கமாய் நண்பருடன் குதித்துத் 
தெருவோடும் நதி மீது 
படகு விட்டுச் 
சரக்கு ஏற்றிச் 
சண்டை முற்றி டாங்கிகள் தாக்கி 
வீட்டிற்கு வீடு துறைமுகம் ஆகத் 
தோழிப்பெண்கள் பயணிகள் ஆகத் 
தோத்தா வீட்டுச் சாக்கடைக் குழியில் 
தொலைந்து போகும்வரை தொடர் விளையாட்டு 
நடுவில் வந்த வெயிலொளி 
தன்னை அன்னியனாக உணர்ந்து மறைய 
அடுத்துக் கொட்டும் அடைமழை எங்கும் 
அவிழ்த்துவிட்ட மகிழ்வின் தேனடை 

*** 

காளான் சித்திரம்

என்ன இது! இந்த உலகம் 
காரைச்சுவரில் பூத்த 
காளான் சித்திரம் போலப் 
பார்க்கும் விதத்தில் எல்லாம் 
படம் மாறி மாறிக் 
காட்சி தருகிறது 
மழையிலும் வெயிலிலும் 
காய்ந்து நனைந்ததாலா 
மனக்காளான் பூத்ததாலா 
எனக்கென்ற ஓரத்தில் 
நான் நின்று பார்ப்பதாலா? 

***

ஏனிந்த மாற்றம்?

ஏனிந்த மாற்றம் 
எவர் வருகின்றார் 
இடியின் கட்டியத்தில் 
காற்று ஓரம் ஒதுக்கிவிட 
ஒரு பளிச்சுக் கற்றைதனை 
மின்னல் சுழற்றிவர 
நாய்கள் நடுங்கி 
நடுவானைத் தாம் குலைக்க 
மண்ணின் மலர்முகத்தின் 
மகரந்த வாசனையில் 
நடைபயின்று வருவோர் யார்? 

***

மாக்ஸ் முல்லர்

நூறாண்டுத் தவம் கிடந்து 
முத்தி நோற்ற முதிர்சுவையில் 
எதிர்க்கரையில் பழுத்து 
இக்கரைக்கு ஏங்கிய 
அக்கறையே ஊட்டமாய்த் திரண்ட 
ஞானக்கனி 
ஓடு விதை உள்பருப்பு 
கோதனைத்தும் தீஞ்சுவையாய்த் 
திரள்பயனாய் 
உருண்ட கனியில் 
ஏதோ ஒரு பகுதியில் 
ஊசிமுனைக் குத்திடத்தின் 
ஒரு நாலு பங்கில் ஒரு பங்களவு 
சிறிய புள்ளி சரியில்லை என்றாய் 
சரிதான். உன்னைக் கனியுண்பவன் 
என்று தவறாக நினைத்துவிட்டேன் 
மற்ற பகுதியெல்லாம் 
மாமருந்து என்று கூறி 
நண்பனிடம் கொடுத்த கனி 
அவன் கை கனக்கத் 
திருப்பித் தந்ததை 
இங்கேதான் எங்கோ வைத்தேன் 
எங்கே என்றறிந்தால் சொல்லும்

***

விண்ணாய் விரிய வேர்த்தல்

சுருண்ட முடிக்கு நடுவே
தெரியும் இருள்
மனம் எங்கே என்று கேட்டது
கண்ணின் விழியில்
மின்னும் ஒளி
இருள் எங்கே என்று கேட்டது
காதின் முறத்துள்
குழிந்த வளைவு
பாதை எங்கே என்று கேட்டது
காலடியின்
உட்பாதச் சொப்பில் அடங்கிய
சிறுவெளி
விண்ணாய் விரிய வேர்த்தது 

***

உணர்வின் ஒளிமுகை

கால அலைமுகட்டில் 
கருக்கொள் பொருள் மீது 
கணமோ கல்பமோ கட்டுமரமேறி 
விலக நிற்கும் நிற்க வரும் 
வேகத் தரங்கங்களூடு 
அலகேந்தும் அற்புதத்து மர்மம் அறிவிக்கச் 
சிந்தா சித்தத்துச் சீர்முனையில் 
அந்தத்தின் பின்னும் 
அலையாத நுணுக்கத்தின் 
உணர்வின் ஒளிமுகைக் 
குவிநுனி கடந்திலகு  
திறனூற்றத் தோற்றா உருவாம் உயிர்ச்சுடர் 

***

Tuesday, October 26, 2021

கொள்ளிடத்து வான் புனல்

என்றோ எப்பொழுதோ 
என் நினைவில் நிற்கிறது 
இன்று போல் இப்பொழுதும் 
ஏனென்று யார் கண்டார் 
மாலை மயங்காத முருகல் வெயிலில் 
தெருச் சந்தடி தாண்டிப் 
பருக்கை மணல் கால் பதியும் 
கொள்ளிடத்து வான் புனத்தில் 
கொஞ்சும் இயற்கை 
கூட்டி வைத்த பெருங்கொலுவில் 
நெஞ்சம் கரைத்து நிர்மலத்தின் 
மஞ்சத்தில் தோய்ந்துவர 
துணையுடனோ தனியேவோ 
நினைவில்லை சென்றிருந்தேன் 
தேன் பூத்த தென்றல் 
தொடர்ந்தது வாலாடிவரத் 
தெள்ளிய நீரோட்டம் கடந்து 
தெளியாத வான் கவ்வும் 
தொடுவானப் பெருமணலில் 
தாள் தடக்கை நீட்டிச் சாய்ந்திட்டேன் 
எதிர்வீட்டுக் கொல்லையிலே 
ஏறிக் குதித்தான் பகலோன் 
இரவுக்கு ஊறவைத்த இனிமையிலே 
எங்கும் இருள் கவ்வத் தொடங்கியது 
பகற்பொழுதும் பிதிர்ந்தாலும் 
பார்வைக்கு மறையவில்லை 
பார்த்தபடி நடந்து பருமணல் தாண்டிப் 
பளிங்கு நீர் சிலிர்த்து 
ஒலியடங்கி ஓடும் ஆற்றில் 
ஒருவாகாய்க் கால் செலுத்தி 
உராயும் ஒலி உளம் செலுத்தி 
ஓர் எண்ணப் புனலாடிச் செல்லுங்கால் 
கீழே கண்குத்தி நின்ற அலை 
சுழித்து வருகின்ற ஓருருவம் 
ஆற்றுநீர் மாலையிட்டு 
அவிழ்த்துவிட்ட பின்னலிட்டு 
அங்காந்து வாய்நீரை 
ஆகாயக் கொப்புளித்து 
முன்மறைத்த மயிர் கண் விலக்கிக் 
கட்டவிழ்த்த கச்சில் 
குளிர் விரைத்த கொங்கைகளின் 
காம்பில் சுழித்தோடும் குற்றலைகள் 
கோணிச் சரிந்து விழும் வயிற்றுமடுவில் 
வானின் திவலைகள் வரியாகிக் 
காணாமல் போகின்ற கால்புழையுள் 
கன்னி காவிரியாய்க் காவதம் கடந்து வந்த 
பொன்னி புடைபெயரும் கிழக்கில் 
புடை மெருத்த முலைக்கண்ணும் 
பூரித்த வலைக்கண்ணும் 
புதிர்க் கண்ணால் சுழித்த உந்தி 
கடைக்கணித்த நினைவோ 
என் கண்ணில் இன்றும் எழுந்தாடும் 
கொள்ளிடமே சமயத்தில் தானே நீராடிடுமோ 
காணாத கொசுவத்தைக் காலுதைத்து 
அலைக்கரத்தால் அவிழ்த்த கச்செறியக் 
கதிர் மறைத்து இருள் விரியக் 
கண்ட காட்சி கருத்தில் 
அலையெறியக் கரையடைந்தேன் 

*** 

மழையின் தயக்கம்

மழைக்கேன் தயக்கம் 
பெய்ய வேண்டியதுதானே 
இல்லையேல் 
பேசாமல் காற்றோடு 
இரவோடு இரவாக 
ஓடிப் போய்விடலாமே 
விண்மீன் கண்சிமிட்டிக் 
கோணல் மின் சிரிப்புதிர்த்துக் 
கெக்கலித்த வானோடு 
கூடி இலை அலர்தூற்ற 
எண்டிசையும் முகங்கருத்து 
எங்கும் இதே பேச்சன்றி 

***

காட்சியின் சொல்

கண் என்னும் கனி பிழிந்து 
கொட்டிய ரசக் காட்சி 
எண்ணத்தின் அமுதப் புனலை 
எங்கும் பரப்பி வைத்த பசும்பேழை 
பண்ணில் பயிர் செய்து 
பரவசமணி அறிந்து வைத்த 
பொற்குடங்கள் 
விண்ணை நெசவாக்கி 
வியனாடை ஓரத்தில் 
குங்குமம் தொட்டு வைத்த 
கோலப் பகல் 
காட்சியின் சொல் விடியக் 
கதிரெழுந்த கவிதை 

***

நல்லால் இலை கிடந்து

உலக உருண்டை 
என்னுடன் பிறந்தது 
கருப்பைச் சுவரில் 
உந்தி எழுந்தேன் 
கட்புலன் ஆகாக் கோளம் 
சுற்றிச் சுற்றிச் சுழன்றுவர 
உதைத்து உருட்டித் தொலைவில் 
உள்ளே விரிவைக் கூட்டியணைத்து 
நான் செயும் சாகசம் 
விரிபுள்ளியின் விளிம்பில் 
புல்கும் ஆரக்கால்கள் 
விடுபட்டு வடிவற்று விரைய எங்கும் 
நுண்ணணுவின் நன்னடுவில் 
நல்லால் இலை கிடந்து 
நான் உறங்கும் காலம்வரை

***

ஒளிக்கன்று

உச்சி வான் ஊடே சென்று 
முட்டும் கன்று 
ஒளி சுரப்பில் உயிர்வாழ் 
உணர்வுக் கன்று 
உள்குருத்தில் அருள் பொலிய 
உண்மை ஈன்ற ஒளிக்கன்று 
முழுமைக்கான முனைப்பீன்ற 
முத்திதரும் மனக்கன்று

***

மூன்று உண்மைகள்

வார்த்தை நுனியில் 
மாட்டிக் 
கவிதை படபடக்கிறது

வானத்தின் அடியில் 
சூரியன் 
தகதகக்கிறது

கடந்து செல்லும் மேகத்தினின்றும் 
துளி ஒன்று 
விழுகிறது

*** 

இதயத்தில் ஒரு மாடு

இதயத்தில் ஒரு மாடு 
இங்குமங்கும் அசைகிறது 
உதயம் வருமுன்னே உதிரிப் புல்மேய 
உள்ளம் சுவற உராய்கிறது 
உள்ளே செல்ல 
உந்திக் கிளர்ந்து 
வெளிவர முந்தி வளைத்த 
உணர்ச்சி விலாவில் 
முட்டும் கொம்பில் 
உரசி நின்றே உமிழ்நீர் சுரக்க 
ஆற்றி அரிப்பைத் தேய்க்கிறது 
திறந்து விடத்தான் வேண்டும் 
தினவடங்க தினகரன் வருமுன்னே 
கரந்து நின்ற கதவம் 
தாள் கொளுவி திறந்துவிடத் 
தானே வந்துவிடும் 
தட்டி தடுத்து நின்றால் தலைப்பாய்ச்சல் 
மஹா என முழக்கி 
மந்தைப் பிரசை எழுப்பும் 
மோனக் கூப்பாடு 
மந்திரமாய்த் தானொலிக்க 
ஊனச்செவி தூங்கி 
உட்செவி புலரியெழத் 
தினவு தீரட்டும் 
திறந்துவிடத்தான் வேண்டும் 
உள்ளே சென்றிடவோ 
வெளியே வந்திடவோ 
ஓலத்தின் உள்ளாழம் 
ஊரை எழுப்புமுன்னே 
மந்தையில் எண்ணிக்கை 
ஒன்று குறையுதென்று 
சிந்தைச் சுடரேந்திச் 
சிதாகாச வீதியெல்லாம் 
காலச் சந்துகளில் 
குரலெழுப்பி நான் என்றே 
கோல்கை தாம்பாரக் 
கூவிவந்து ஓராயன் 
கொட்டிலில் அடைக்குமுன்னே 
குலவு கருத்திலொரு 
கவிஞன் எழுதிவைக்கக் 
காலம் அதையுண்டு 
கருவுயிர்த்த இதயத்தில் ஒரு மாடு

***

இடம் காலம் என்ற ஓருரு

இருளின் ஈரக்கால்கள் 
இடத்தின் மெய்யெங்கும் பற்றி 
உணராத் தோலின் உள்வெளியெல்லாம் பரவக் 
கண்ணற்ற காட்சியின் கருமை 
தன்னைத் தானே காண்பொருட்டு நின்றது 
எண்ணற்ற ஒளிச்சுரும்புகள் அணுச்சாரலாய் 
மண்ணற்று விண்ணற்று கண்ணற்று 
எண்ணுமற்ற இடகால 
ஈருமிழைப் பந்தப் பின்னலூடு புக்கு 
இடம் காலம் என்ற ஈருரு இறுத்துக் 
கணத்தின் கண்விழி மையத்துள் 
காணாக் கூரிருளில் 
குவித்த உயிர்த்தொகையைக் 
கூறாக்காக் காலத்தே 
தன்னைத் தானறியத் தன்னில் வேறாய்த் 
தன்னின் புறத்தொன்றின்றித் தானே தனதாய்த் 
திதித்த ஒன்றில் 
திரை தத்தித் திரிந்த வேகம் 
கால முதுகோடேறி 
இடத்தின் விலா பற்றிக் 
கிளர்ந்தெழுந்த கோலம் இவ்வுலகம்.

***

பிரம்ம பிரயத்தனம்

கடலை
ஆடாது அசங்காது
ஒரு கணமேனும் நிறுத்தி வைக்க
ஒரு குருவி
அங்குமிங்கும் ஆடிப்பறந்து
புன்சிறகு குவித்து விரித்துப்
பிரம்ம பிரயத்தனம் செய்வதற்குப்
பகலில் வெயிலாய்
இரவில் நிலவாய்ப்
பந்தம் பிடிக்கும் ஒன்றைப்
புறக்கண் காணும் அன்றே
சாகசப் புள்ளிற்கு ஓய்வு 

***

சிறகசைவின் சமிக்ஞைகள்

ஆம். உங்களுக்கு நான் 
பல உலகங்களைக் காட்ட முடியும் 
பல பிறவிகளைத் தந்து 
பல கடல்களில் ஆழ்த்திப் 
பல வானங்களை விரித்துப் 
பல உடல்களில் வாசத்தைத் தரமுடியும் 
உங்களைச் சுமந்து அன்று 
இழுத்துத் திரிந்து அன்று 
உட்கார வைத்து ஓட்டிச் சென்றன்று  
ஒன்றுமே செயல் இல்லாது 
உருப்படிக் கணக்காய் 
இருந்தால் உங்களை என்னால் 
ஒன்றும் நிகழச் செய்ய ஒண்ணாது 
என் சிறகசைவின் சமிக்ஞைகள் 
புலனாகும் உணர்வுப்பொறுப்பு 
உங்களுடையது. 

***