Sunday, October 31, 2021

வடம் பிடிக்க வாருங்கள்

இடம் பிடிக்க வேண்டுமெனில் 
வடம் பிடிக்க வாருங்கள் 
அரங்கன் தேர் அசைகிறது 
ஒப்பனையாய் வைத்த பரி 
ஒய்யாரப் பாய்ச்சலில் 
ஊரெல்லாம் கூடிவந்த ஒத்துழைப்பில் 
ஊமையின் உதடசையும் 
ஊன்றுவிழி இமையசையும் 
ஊர்க்கோடி முக்கினிலே முட்டடித்து 
மூங்கில் கழி கெட்டித்து 
மூலப் பெரும் பாழை 
முக்காலக் கோலடித்து 
மூண்ட படைப்பின் மூலச்சுருதி வாங்கி 
மூச்சடங்கிப் பேச்சடங்கி 
மூளும் உயிரடங்கி 
மேல் வார்த்த தோலின் ஆர்ப்படங்காக் 
கார்வைதொனி தானசையும் 
அடிவயிற்றில் மூச்செடுத்து 
அண்டத்தின் வேரை 
ஆதிமுதல் அடிபோட்டு 
அந்தத்தை முடிபோடும் 
அழியாத விதியை 
ஆர்த்துவரும் தாம்பிழுத்துக் 
குலநீர்மை ஒன்றாகிக் 
கூடியெழும் கோவிந்தா குரல்முழக்கில் 
கொட்டும் வேர்வையினில் 
குடமுழுக்கு ஆன குலம் ஒன்றாய் 
அரங்கன் தேர் அசைகிறது 
அவன் கிடந்த மண்ணில் 
ஆற்றின் இடைக்குறையில் 
ஆய்ச்சிக் கைத் தாம்பிற்கு 
அஞ்சி அச்சுதனார் 
ஆயிரவாய் அரவணைப்பில் 
அறிதுயிலும் அரங்கத்தில்... 

***

No comments:

Post a Comment