Tuesday, October 26, 2021

இதயத்தில் ஒரு மாடு

இதயத்தில் ஒரு மாடு 
இங்குமங்கும் அசைகிறது 
உதயம் வருமுன்னே உதிரிப் புல்மேய 
உள்ளம் சுவற உராய்கிறது 
உள்ளே செல்ல 
உந்திக் கிளர்ந்து 
வெளிவர முந்தி வளைத்த 
உணர்ச்சி விலாவில் 
முட்டும் கொம்பில் 
உரசி நின்றே உமிழ்நீர் சுரக்க 
ஆற்றி அரிப்பைத் தேய்க்கிறது 
திறந்து விடத்தான் வேண்டும் 
தினவடங்க தினகரன் வருமுன்னே 
கரந்து நின்ற கதவம் 
தாள் கொளுவி திறந்துவிடத் 
தானே வந்துவிடும் 
தட்டி தடுத்து நின்றால் தலைப்பாய்ச்சல் 
மஹா என முழக்கி 
மந்தைப் பிரசை எழுப்பும் 
மோனக் கூப்பாடு 
மந்திரமாய்த் தானொலிக்க 
ஊனச்செவி தூங்கி 
உட்செவி புலரியெழத் 
தினவு தீரட்டும் 
திறந்துவிடத்தான் வேண்டும் 
உள்ளே சென்றிடவோ 
வெளியே வந்திடவோ 
ஓலத்தின் உள்ளாழம் 
ஊரை எழுப்புமுன்னே 
மந்தையில் எண்ணிக்கை 
ஒன்று குறையுதென்று 
சிந்தைச் சுடரேந்திச் 
சிதாகாச வீதியெல்லாம் 
காலச் சந்துகளில் 
குரலெழுப்பி நான் என்றே 
கோல்கை தாம்பாரக் 
கூவிவந்து ஓராயன் 
கொட்டிலில் அடைக்குமுன்னே 
குலவு கருத்திலொரு 
கவிஞன் எழுதிவைக்கக் 
காலம் அதையுண்டு 
கருவுயிர்த்த இதயத்தில் ஒரு மாடு

***

No comments:

Post a Comment