Tuesday, October 26, 2021

கொள்ளிடத்து வான் புனல்

என்றோ எப்பொழுதோ 
என் நினைவில் நிற்கிறது 
இன்று போல் இப்பொழுதும் 
ஏனென்று யார் கண்டார் 
மாலை மயங்காத முருகல் வெயிலில் 
தெருச் சந்தடி தாண்டிப் 
பருக்கை மணல் கால் பதியும் 
கொள்ளிடத்து வான் புனத்தில் 
கொஞ்சும் இயற்கை 
கூட்டி வைத்த பெருங்கொலுவில் 
நெஞ்சம் கரைத்து நிர்மலத்தின் 
மஞ்சத்தில் தோய்ந்துவர 
துணையுடனோ தனியேவோ 
நினைவில்லை சென்றிருந்தேன் 
தேன் பூத்த தென்றல் 
தொடர்ந்தது வாலாடிவரத் 
தெள்ளிய நீரோட்டம் கடந்து 
தெளியாத வான் கவ்வும் 
தொடுவானப் பெருமணலில் 
தாள் தடக்கை நீட்டிச் சாய்ந்திட்டேன் 
எதிர்வீட்டுக் கொல்லையிலே 
ஏறிக் குதித்தான் பகலோன் 
இரவுக்கு ஊறவைத்த இனிமையிலே 
எங்கும் இருள் கவ்வத் தொடங்கியது 
பகற்பொழுதும் பிதிர்ந்தாலும் 
பார்வைக்கு மறையவில்லை 
பார்த்தபடி நடந்து பருமணல் தாண்டிப் 
பளிங்கு நீர் சிலிர்த்து 
ஒலியடங்கி ஓடும் ஆற்றில் 
ஒருவாகாய்க் கால் செலுத்தி 
உராயும் ஒலி உளம் செலுத்தி 
ஓர் எண்ணப் புனலாடிச் செல்லுங்கால் 
கீழே கண்குத்தி நின்ற அலை 
சுழித்து வருகின்ற ஓருருவம் 
ஆற்றுநீர் மாலையிட்டு 
அவிழ்த்துவிட்ட பின்னலிட்டு 
அங்காந்து வாய்நீரை 
ஆகாயக் கொப்புளித்து 
முன்மறைத்த மயிர் கண் விலக்கிக் 
கட்டவிழ்த்த கச்சில் 
குளிர் விரைத்த கொங்கைகளின் 
காம்பில் சுழித்தோடும் குற்றலைகள் 
கோணிச் சரிந்து விழும் வயிற்றுமடுவில் 
வானின் திவலைகள் வரியாகிக் 
காணாமல் போகின்ற கால்புழையுள் 
கன்னி காவிரியாய்க் காவதம் கடந்து வந்த 
பொன்னி புடைபெயரும் கிழக்கில் 
புடை மெருத்த முலைக்கண்ணும் 
பூரித்த வலைக்கண்ணும் 
புதிர்க் கண்ணால் சுழித்த உந்தி 
கடைக்கணித்த நினைவோ 
என் கண்ணில் இன்றும் எழுந்தாடும் 
கொள்ளிடமே சமயத்தில் தானே நீராடிடுமோ 
காணாத கொசுவத்தைக் காலுதைத்து 
அலைக்கரத்தால் அவிழ்த்த கச்செறியக் 
கதிர் மறைத்து இருள் விரியக் 
கண்ட காட்சி கருத்தில் 
அலையெறியக் கரையடைந்தேன் 

*** 

No comments:

Post a Comment