( இது வெண்பா எழுதும் ஊக்கத்தில் தொற்றிக்கொண்ட ஒரு வேகம்.
திரு செல்வப் புவியரசு தம்முடைய கல்லூரிநாள் வெண்பா முயற்சியைப் பற்றி எழுதியதைப் படித்த போது கடைசி வார்த்தை பார் என்பதைப் பார்த்ததும் அந்தச் சொல்லை வைத்தே தொடச்சியாக எழுதிப் பார்க்கும் ஊக்கம் அதனால் இரண்டு நாட்களில் இந்த மின்னரங்கத்தந்தாதி. வெண்பா நடையில் வைணவம் என்று இரண்டும் கலந்த உபயகவியாக எடுத்துவிட்டேன். இருந்தாலும் 2 நாட்களில் ஒரு நூற்றந்தாதியாக
வெண்பா பாடமுடிந்தது ஓர் உவகைதான். )
1)
பாரளந்த செம்மல் பனிக்குமென் நெஞ்சத்தைக்
காரளந்த மேனிகொண்டு காவானேல் -- தேரளந்த
வீதியெலாம் சென்று வியன்விண் பெருமானார்
மேதினியில் ஊர்வேன் மடல்.
2)
மடலூர்ந்த நெஞ்சத்து மங்கையர்கோன் தாளை
விடலென்று மென்நெஞ்சே வாழ்வில் -- திடம்பொலிந்த
தாளிணையும் வேல்நுனியும் தண்டமிழும் கொண்டென்னை
ஆட்படுத்தி ஆளும் அரண்.
3)
அரணாகும் மாதவனே அன்பீனும் சேயாய்த்
தருணத்தில் தாங்கும் தயையாய்த் -- திரமே
எவர்காப்பும் என்செய்யும் நம்காப்பும் காப்போ
அவன்காக்கும் காப்பொன்றே காப்பு.
4)
காப்பு மறந்ததுவும் கண்ணன் கழல்பாதம்
கூப்ப மறந்ததுவும் கையென்றால் -- தீப்போந்
தெரிக்க மறுப்பதுவும் நீர்தான் நனையா
திருக்க வடுப்பதுவும் காண்.
5)
காணார் உலகிதனைக் கண்டவர் தாமோரார்
கோணாகம் கால்மிதித்து நட்டான் குரக்கினத்தை
சேணாடு தந்துவணப் புள்ளுயர்த்திப் பாரித்தான்
கோணாத நெஞ்சுள் புரிந்து.
6)
புரிந்த மலர்ப்பாதப் புண்ணியனே வேலை
திரிந்து திரைமோதும் மூதுலகம் தாளால்
வரிந்தே அளந்திட்ட சேவடியின் வண்ணம்
தெரிந்தென் உளந்தொட்ட தாள்.
7)
தாள்தடவும் விண்ணுலகும் தன்சோதி வைத்தவ்வூர்
ஆள்தேடிச் சூழ்தருமோர் கீழ்வரவும் -- மாளாத
காதல் மழையாகிக் கன்னிமையோர் பொன்பூக்கும்
போதம் அதுவே புகல்.
8)
புகல்வோம் புரிவோம் புரையறுநல் மூர்த்தி
அகலாது நெஞ்சத்துள் வைத்து -- மிகைவாழ்நாள்
தீர்ந்தும் அவனடிக்கே தொண்டுக் கடன்பூணப்
பேர்ந்தும் உகப்பே பயன்.
9)
பயனெண்ணிப் பாரில் பலவருத்த முற்றார்
செயலெண்ணிச் சோர்ந்தாராய்ச் சென்றார் -- அயன்விதியில்
இட்டதுவே கிட்டிவரும் என்னில் இறையடியே
இட்டமுடன் ஒன்றல் திறன்.
10)
திறனாக நீடெண்ணித் தீர்ந்த விதிக்கே
அறமாவ தேதென்னில் உய்வாம் -- மறவாமல்
மாதவனை மன்ன மனத்தி லிருத்துவதே
ஏதமிலாச் செய்கை யுணர்.
11)
உணர்ந்தும் உளமாழ்ந்தும் ஆருயிர் உண்ணும்
தணந்தும் தருவழிக்கே தாரம் -- மணந்தாலும்
விட்டுப் பிரியாத வீட்டின்பம் பாரித்துக்
கட்டிற்குள் காப்பே கதி.
12)
கதியை நினைத்துக் கவலுறுதல் வேண்டா
மதிநலம் தந்திடும் மாயன் --- வதியுமிடம்
வைகுந்தம் வாழ்வு மவன்சித்த மாகும்காண்
வைகும் பணிகைங்கர் யம்.
13)
அம்மாநல் வீட்டின் அருமை உணர்ந்திட்டே
வெம்மாய மெல்லாமும் விட்டகல -- வேங்கடனைக்
கூவா திருந்தக்கால் கிள்ளாய்நங் கர்மத்தின்
ஓவாத கட்டு மிகும்.
14)
மிகுநரை இல்லாத மாதவன்தன் மாயம்
உகுநரை இல்லா வலித்தால் -- இகுநர்
இருவினைக் கட்டழிய ஈறிலா இன்பத்
திருமாலால் வீடு பெறும்.
15)
பெற்றும்தன் பேறிழந்தும் பார்முதலாம் புண்ணியமே
கற்கும்நற் கல்வியெலாம் என்றிருப்பர் -- புற்கலமாய்ப்
போந்த வழியெல்லாம் போதந்த மார்க்கமாய்ப்
பாந்தமாய் நிற்கும் பரம்.
16)
பரத்தில்சீர் மாலாகிப் பாம்பணையில் கேட்டுத்
தரையெங்கும் தானுவந்து வந்து -- திரமாக
ஊனுடலில் உள்ளொளியாய் நீடுலகம் உய்வதற்கே
மானுடத்தைச் சார்ந்த சுடர்.
17)
சுடர்கொள் விளக்கேற்றிச் சுந்தரனைக் காண
அடர்கொள் இருளென்னாம் அன்பில் -- திடர்கொள்ளும்
தேற்றத்தைத் தீங்கழலைத் தாமோ தரன்தன்னை
ஆற்றவினி தாமவன் பா.
18)
பாவும் படுபொருளும் பார்முடிவும் பங்கயத்தோன்
தேவும் திசைவிண்ணும் எல்லாமும் -- கூவுகின்ற
கூப்பாடு கேட்குமிடம் கொண்டடையும் கைச்சரக்கே
ஆப்பவிழும் ஊழின் கடை.
19)
கடைந்திட்ட வெண்ணையைக் கையகலம் கொண்டு
மிடைந்திட்டு மாலானார்க் கூந்தல் --- அடைந்திட்ட
ஆயனவன் கோவிந்தன் ஆவினத்தை மேய்த்திட்டான்
சேயனவன் என்னலுமோர் சொல்.
20)
சொல்கடந்து தாதைதன் சொல்கடவா பெற்றியினால்
கல்கடந்த ராக்கதனின் நீள்விதியை -- வில்கடந்த
தன்றே அரணியத் தொல்கடந்து தத்துவமாய்
நின்றதந்த நாயகன் பேர்.
21)
பேராப் பிறவி பெயர்க்கும் பெருமான்தன்
வேராம் அடியிணைகள் வித்தாம் -- அயராத
காதல் தொழும்பால் களிபாயும் தொண்டினில்
நோதல்தான் இல்லை நுகர்.
22)
நுகரும் திரிபுலன்கள் நேருற்று நன்மைப்
பகரும் பருமொழியால் பாத்தும் -- அகரத்தில்
காப்பதுவாய் ஆங்கவர்க்கே ஆனதுவாம் ஆன்மாவும்
மோப்பக் குறைவில் உலகு.
23)
உலகு படைத்ததுவும் உள்ளொடுக்கி வைத்தோ
அலகில் விளையாட்டாம் என்பர் -- விலகாதே
ஈன்ற புகழ்ஞாலம் கன்றுகக்கும் தாய்ப்பசுபோல்
பூன்றநல் லாயன் தலை.
24)
தலையாவார் மூவருளும் தானே ஒருவன்
கலையா துலகத்தின் கர்மம் --- சிலைகொண்டு
சிந்தினான் தென்னிலங்கைச் சீரும் சிதல்வாழ்வும்
மந்திபாய்த் தோழமை உற்று.
25)
உற்றபழி நீக்கி உருப்பிணியைக் கைப்பிடித்தான்
பற்றற்றார் உள்ளம் மகிழ்ந்திடவே --- முற்றும்
துறந்தவர்கள் பக்கம் திரமாகி நின்றான்
மறுத்தாலும் மாச்சொல் வலிது.
26)
வலிதென்றே உள்வாங்கி வல்லரக்கன் வாழ்வைப்
பொலிந்துநின்ற எம்பெருமான் தொட்டான் -- கலிகன்றித்
தொட்டதமிழ் எங்கெங்கும் தோன்றிக் கிளர்ந்துநின்றே
இட்டமுடன் ஆளும்நங் கோ.
27)
கோவாகி ஞாலமெலாம் காத்தளிக்கக் கானடைந்தான்
ஓவாமல் என்னுள்ளான் காக்குமவன் -- நாவாயில்
உண்டே உவந்துரைக்கப் பேருண்டே நாம்பின்னும்
கண்டுணர உண்டன்றே கண்.
28)
கண்ணாகி நின்று ககனம் புரந்தாலும்
எண்ணிற்கும் சேயரியன் என்னுள் அமர்ந்தானே
அண்ணிக்கும் ஊறும் அமுதாமன் பர்க்காளாய்ப்
பண்ணினான் என்னைப் பரன்.
29)
பரனடியே சென்றுவந்து பார்வண்ணம் கண்டால்
மரவடியின் மாபணயம் தானாம் -- திரமாக
வேதம் உரைப்பதெல்லாம் வேந்தன் நடைகாட்ட
நீதம் நெறியாகி நின்று.
30)
நின்றென்னுள் என்றும் நிமலன் தனைக்காட்டான்
அன்றென்னுள் வீற்றதுவும் எவ்வாறு? -- கன்றாய்க்
குனிந்திட்டு நீர்சுவைத்தான் கல்லிதயன் என்னைக்
கனிந்துவந்து காவாத தென்?
31)
தென்னன் பொருப்பில் திகழ்ந்த பசுந்தமிழை
மன்ன நிறுத்தினான் மாலுக்கே -- தன்பெருமைத்
தானும் அறிவரியான் தாமோ தரன்தாளில்
ஆனான் குருகூ ரரசு.
32)
அரசுடன் செல்வமும் ஆட்படையும் கொண்டு
பரிந்த குலசே கரன்தன் -- மறமும்
உதிர்த்த இராமனும் ஊர்வந்த பொய்யே
கதிதந்த காப்பெமக் கிங்கு.
33)
இங்குமங்கும் நின்ற இடைச்சுவரைத் தாம்தள்ளி
மங்காத ஞானம் இயல்வாகப் -- பொங்கோதம்
சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் ஒன்றாக்கும்
ஆழ்ந்த அருளே துணை.
34)
துணையாவன் யாவன் நெடுமாலை அல்லால்
பிணைதந்து கேட்டாலும் போக்கார் -- அணைதந்து
மீட்டதோர் காதல் மறித்தும் இழக்குமோ
ஈட்டியகைக் கஞ்சன் பொருள்.
35)
பொருளாவ தெல்லாம் பிரமன்நற் தாதை
மருளாகும் மாயத்தை நீக்கி -- அருள்கொண்டு
பூமாதின் தொல்லடியார் நல்லெண்ணம் வித்தாகச்
சேமம் உடைத்திவ் வுயிர்.
36)
உயிரேநீ நல்லை உனைக்காத்துக் கொண்டாய்
அயர்க்கும் அலமந்தென் னெஞ்சம் -- பயிர்ப்பும்
எனைவிட்டே ஏகினதால் ஏதிலார் தம்மை
வினையென்னச் சூழுமிப் பொன்.
37)
பொன்தோய்க் குடுமிப் புகழ்மாறன் வெற்பிடையே
கன்னவிலும் தோள்கண்ணன் தாகம்தான் -- சென்னிக்குத்
தாக்கியதால் தன்னை இழந்தான் தளர்ந்திங்கே
ஊக்கியதும் நல்உலகின் ஊழ்.
38)
ஊழையும் உப்பக்கம் காண்பெரியர் உத்தமன்தன்
பாழைப் பயிர்செய்யும் பான்மைக்கே -- ஆழில்
உடல்கருவி ஊட்டுவினை உய்யும் நெறியாய்
மடலெடுக்க முந்திவரும் மாண்பு.
39)
மாண்பெரிய வையம் மலிதிரைநீர் பௌவத்தின்
கோணரிய கொள்கைத்தாம் கோலத்தால் -- சேண்பெரிய
நாட்டினிலும் ஈர்ப்புடைத்தாம் இவ்வுலகம் நானிலத்தார்
கோட்பா டுணராரோ தேர்ந்து.
40)
தேர்ந்திட்ட கொள்கையாய் மாலின் திருவடிக்கே
ஓர்ந்திட்ட நெஞ்சத்தார் ஆயினரே --- ஆர்ந்த
முனிவரரும் யோகிகளும் முன்னைப்பல் வேதம்
கனிந்தபயன் கேசவனென் றே.
41)
ஏபாவம் எங்குற்றீர் எல்லோரும் என்னானீர்
ஆமாறும் யானறியேன் அன்னைக்கும் என்னானேன்
சேர்ப்பாரும் எங்கேயோ சேவகனும் வாரானால்
மாற்பால் மனச்சுழலில் யான்.
42)
யானேயோ ஓர்நெறிக்கே யத்தினமும் என்கடவேன்
கோனேயோ வேங்கடத்தில் காட்டுங்கை -- வானேர்
வரைமூங்கில் குட்டிக் குரக்காடும் ஆறோ
அரைசேர்த்த அங்கைகள் கூப்பு.
43)
கூப்பிட்ட யானைக்கே புள்துரத்த வந்துநின்றால்
காப்பிடுமோ காதல் கயம்படுமோ -- ஓர்ப்பிலாய்!
வேர்த்தோடி நின்ற வினதைச் சிறுவனுக்கே
பேர்த்திங்கும் உள்ளதுவோ ஒப்பு.
44)
ஒப்பாரில் லப்பன் உவமைக்கும் எட்டாதான்
எப்பாரும் உய்ய இவண்வந்தான் -- கப்பாகக்
கையில் குடையா மலையெடுத்தான் குன்றதுவே
எய்ப்பினில் வைப்பாம் நமக்கு.
45)
நமக்கென்றும் நற்சேமம் நாரணன் பாதம்
உமக்கென்ன வேறுடையீர் கண்டீர் -- இமவானின்
பெண்தன்னில் பங்கானான் மார்க்கண்டர் கொண்டேகி
கண்ணாவான் காட்டே கரி.
46)
கரிந்திட்ட பிள்ளைக்குக் காப்பும்தான் ஆனான்
எரிந்திட்ட பிள்ளையால் மீட்டான் -- பரிந்துவந்து
பார்த்தர்க்காய்த் தேர்கடவிப் பாருள்ளார் தாமுய்ய
வார்த்தை யளித்தான் கவி.
47)
கவியானேன் காகுத்தன் காக்கும் திறத்தைப்
புவியெங்கும் போற்றுதற்குப் பூரித்தேன் என்று
சவியாது புள்ளின் பிரிவேக்கம் கொண்டான்
அவியுணவின் வானமரர் வாழ்வு.
48)
வாழ்வா வதுமேது வாழ்ந்தார் பலரென்ப
வீழ்ந்தாரும் மீண்டார் எனல்மிகையே -- தாழ்வின்றித்
தாதையின் சொல்விடுத்துத் தன்னரசை எய்தென்ன
வேதம் நெறியுரைத்தான் விண்டு.
49)
விண்டார் எனப்படுமோ வீங்கிள மூங்கிலொடு
தண்டார்நல் வேங்கடவன் தண்ணிலவம் -- அண்டர்தாம்
வந்த முறையீடு கேட்கைக்கே ஆம்நிலையம்
தந்தமுகம் கண்டும் தமர்.
50)
தமருகந்த தெவ்வுருவம் தானாம் உகப்பு
தமருகப்பர் தன்னுகப்பே என்னில் -- சமராம்
களத்தினிலும் தன்னுகப்பாய்ச் சாற்றினான் கீதை
அளப்பரிய தாமவன் ஏது.
51)
ஏதுக்கிம் மானிடம் பாடிநிற்கும் நற்புலவீர்
வாதுக்காம் நற்பொருளென் வீணன்றோ -- சேதுக்காம்
கல்லும் குரக்கிடவே மண்குளித்த ஓரணிலம்
சொல்லும் பொருளொன்றே ஓர்ப்பு.
52)
ஓர்ப்பரிய பெம்மான்தன் உள்ளம்கேள் பூங்குயிலே!
கார்ப்பணியத் தாலென் கலக்கங்கொல் -- ஏற்பரிய
குற்றமென் கூறாய் எனக்கேள் குணக்கடலை
நறறவம் தானவன்கைச் சார்வு.
53)
சார்வே அவனடியார் செய்தவமும் தொண்டாகும்
நேர்வேதக் கூற்றவன்தன் சொல்லமுதம் --- போர்நாள்
பகையொழித்தான் பங்கயத்தான் நூலளித்தான் பத்தித்
தகைமையும் ஈதென்றான் தந்து.
54)
தந்தம்தாம் கோடுதிரத் தான்முட்டும் கல்லிடையே
சொந்தம் எதுகண்டோ ஆனைப்போர் -- தன்னின்
உறவும் உயிர்நட்பும் ஆனான் அவன்நேர்
உறவில்லை உண்மை உரை.
55)
உரைக்கத் தவம்செயினும் ஊழிக் குணங்கள்
பரக்கப் பிரமனும் சொல்லான் --- திரையில்
துளியெண்ணிச் சோராரும் சோர்வர் திருமால்
அளியெண்ணிச் செல்பி ரமர்.
56)
அமரர்க் கிடமாம் அரங்கனார்த் தீவம்
குமரர்க்காம் கோகுலமும் ஆகும் -- தமருக்கே
தஞ்சம் அதுவாகும் தாரணியில் வைகுந்தம்
கஞ்சனையே காய்ந்தான் கழல்.
57)
கழல வினையெல்லாம் கைகாட்டும் தாதை
அழலவிரும் நேமி அவன்கை -- மழலையே
தாயுகக்கும் வண்ணம் தமருகந்தான் தாளிணையே
போயிருக்கும் நம்மின் புகல்.
58)
புகலற் கரிதாம் பரமன் புகழை
அகல அரிதவன்நற் காப்பும் --- அகலிடத்தே
ஆராயற் பாற்றோ அவனன்பும் காரருளும்
வேராதல் கண்டும் இழப்பு.
59)
இழந்தான் பிரமன் இடைச்சியும் பெற்றாள்
உழந்தான் தயரதனும் பெற்று -- முழந்தாளில்
கைவைத்தான் முன்வினைக் காடழித்தான் காட்டாமல்
நைவித்தான் நாளுமெனை இங்கு.
60)
இங்குமற் றங்கும் இடர்பாய்ந்து நின்றதுகொல்
சங்கங்கள் தங்கும் திருக்குருகூர் -- மங்காத
வைந்நுதிய சக்கரநல் கையன் அருளொன்றே
வைநிதியாம் காரிமாறன் காப்பு.
61)
காப்பும் பெரும்பேறும் கிட்டுவிக்கும் ஆறாகக்
கோப்புண்டான் தானேயாய்க் கண்ணனையே -- கூப்புங்கை
ஆறன்றே அன்பால் நமவென்னல் வாய்புலர்த்தல்
வீறுசரண் ஆறே அறிவு.
62)
அறிவதுவும் ஆம்பொருளும் ஆன்றவறி வோனும்
செறியுமறி முப்படையாய்ச் சேரும் -- முறியாத
மூர்த்தியாய் மூவுலகும் ஆனான் முனைகழலே
சேர்த்திடும் சத்தாம் இயன்று.
63)
இயன்றதே இவ்வுலகம் இன்மை இலதால்
பயின்றதுவும் அப்பரத்துப் பான்மை -- துயின்றதுவும்
யோகு தொலைந்ததுவும் கள்ளமே தன்மையே
யாகமெனல் யாரறிவார் சொல்?
64)
சொல்லொன்றால் நின்று சகம்படைத்தான் சொற்பொருளான்
சொல்லேயாய்த் தன்னுருவும் ஆகிநின்றான் -- சொல்லால்
அகப்படான் சிந்தை இறந்தானேல் அன்பால்
அகப்பட்டுக் கொண்டான் தழும்பு.
65)
தழும்பார்த்த தாம்பொன்றால் தாயும் தளைக்க
அழும்பார்க்கும் அஞ்சுமந் நோக்கும் -- தொழுங்காதல்
தொண்டர்க்கே கட்டுண்ணத் தொல்நோக்கில் ஆய்ச்சியவள்
அண்டர்கோன் கற்பித்தாள் அன்று.
66)
அன்றே உலகம் அளந்ததுவோ அன்றெனிலோ
கன்றேதான் மேய்த்திடவே கற்றதுவோ -- நன்றாகத்
தேர்கடவும் பெம்மானார் தீர்ந்தார்நல் தொண்டிற்கே
யார்கடப்பார் கண்ணன்தாள் தொண்டு.
67)
தொண்டிற்கே உள்ளம்தான் தீர்ந்தால் திவத்தினிலும்
அண்டர்க்கே அன்பாய் இருப்பர்கொல் -- கண்டார்க்கே
காதல் கடல்புரையக் கண்ணன் விளைவித்தான்
நோதல் தவிர்த்தான் பதம்.
68)
பதமும்நல் பாரிப்பும் பக்குவமும் பத்தர்
நிதமும் அவனாகம் செய்யும் -- சதமாகச்
சந்நிதியில் தாமிருக்க வேட்ட சடகோபன்
இந்நிலத்தில் மீண்டான் பரிந்து.
69)
பரிந்து திருவும் அவனுள்ளம் மாற்றிப்
புரிந்ததுவும் பேருதவி யாகும் -- தெரிந்ததுவே
தேவர்கோன் தன்னிச்சை மிக்கோன் திருந்திவந்த
சீவனையே சீற்றம் கொளும்.
70)
கொள்ளக் குறைவிலனாம் என்றெண்ணும் தாதையே
தள்ளற்குக் கோபித்தால் தான்மகிழும் -- விள்ளற்
கரியதாம் விந்தை கமலைதாள் போற்றல்
உரியதாம் என்றும் உயிர்க்கு.
71)
உயிரில் பயிர்செய்தான் உத்தமன்தாள் அன்பைச்
செயிரில்நற் பேறடைந்தார் சிச்சர் -- அயிர்க்கும்நீள்
கர்மத்தால் கட்டுண்ணாப் பெற்றி தருவானால்
மர்மத்தில் செய்வான் குரு.
72)
குருநிலத்தில் கொண்டெடுத்து விட்டதேர்த் தட்டில்
உருவழிய விட்டான் பெருவில் -- பருமொழியால்
தேற்றி அவனாகம் பூண்டான் திரமாக
ஊற்றத்தில் ஊழியமாக் கொண்டு.
73)
கொண்டைப்பூ சூட்டிப்பின் கோமகற்குத் தான்தந்தாள்
கெண்டையுண் கண்ணாள் புகழ்க்கோதை --- பண்டைச்சொல்
கேட்டுப்பின் பட்டர்கோன் தான்தந்தான் ஆண்டாளை
வேட்டதிரு மாலே விழைந்து.
74)
விழையுமொரு நல்லிழையாள் நெஞ்சுள் மருகிக்
குழைந்தேதன் இன்னுயிரை நீத்தாள் -- அழையா
விருந்தாகிப் புல்லினான் ஆகம் ஒருத்தி
மருந்தாகா தென்னோ மறித்து.
75)
மறித்திட்ட மைநாகம் மீண்டே அனுமான்
குறித்த இடம்தேடிக் கண்டான் -- நெறிகுழலாள்
உள்ளமறிந் துத்தமன்பேர் சொன்னான் உயிருக்கே
பள்ளமடை யாய்க்கை குவித்து.
76)
குவித்தொன்றாய் மன்னர் குலமாளச் செய்தான்
புவித்தாயின் பாரம் குறைத்தான் -- செவிக்குறுதிச்
செஞ்சொல் தொடையீந்தான் ஆகம் சடகோபன்
மஞ்சமெனத் தான்துயிலும் வேந்து.
77)
வேந்தர் விரைதேரின் பின்போனான் வில்லியும்
ஏந்திழையும் தம்பியுமே கண்டானாய் -- மாந்தர்
மயக்குற்றார் என்றார் மயக்கம் தெளிந்தான்
துயக்கற்றுத் தீர்ந்தான் முனி.
78)
முனிவன்தான் முன்னவர்க்கே மூலத்தில் வந்து
கனிவார்நல் ஈட்டின்பம் கூறக் -- கனியாத
என்னுள்ளம் கொண்டானே என்றும் துறந்தாரும்
இன்பற் றதைக்கொள் பவர்.
79)
பவமும்செல் நாவாயும் பண்ணும் பரமன்
திவமும்தான் வேறொன்றைச் செய்யும் -- அவமே
எனைநோக்கின் ஓர்நரகம் எற்றுக்காம் தான்நோக்கின்
தன்னைப்பின் போதாமை வெள்கும்.
80)
வெள்கிப்போய் வீழ்ந்தாராம் வீரர் விரதிகளாய்
எள்கி நகர்ந்ததுவாம் வெற்றியுமே -- உள்குடைந்தும்
அள்ளிப் பிரிவதுவாம் சிற்றுயிரின் குற்றங்கள்
தெள்ளியபேர் கொண்டான் திறத்து.
81)
திறம்பாது வையத்தைத் தன்னுள் இருத்தி
அறமாகி என்றும்தான் காத்தான் -- மறமாகி
வையம் துடைப்பான் அடிக்கே புகழ்மழிசை
உய்யும் வழியுரைத்தான் உற்று.
82)
உற்று வினையிரண்டும் ஊட்டும்போ தெல்லாமும்
பற்று விடல்குறித்துப் பேசினான் -- சுற்றம்
எனக்கே சடகோபன் நற்றமிழ்நல் நட்பால்
மனக்கேதம் மாற்றினேன் நான்.
83)
நானோ தமிழ்செய்தேன் நாரணன்தொல் நல்லடியார்
ஏனோதான் என்பக்கம் நோக்கினார் -- வானோக்கி
நின்ற பயிர்தளிர்ப்ப நீடுபுகழ் மாறன்சொல்
நன்றே திகைப்பே தினி.
84)
இனியறிந்தேன் என்னை இறைவர்க்காம் என்று
நனியறிந்தேன் என்நெஞ்சில் உண்மை -- மனிதர்க்காம்
மாநெறியாய் மன்னும் புகல்நெறியாய் வேதத்துத்
தூநெறியாய்த் தோன்றும் சுடர்.
85)
சுடரும்வை வேல்நுனியும் சுந்தரத் தோளும்
அடரும் இருள்கடியும் நோக்கும் -- விடலரிதே
வீட்டின் படிகட்டி வேதத் தமிழ்விரித்துக்
காட்டும் கலிகன்றித் தாள்.
86)
தாள்கொண்டே என்நெஞ்சில் பூட்டிப் பெருங்காதல்
ஆள்கொண்டும் என்னை அளிப்பானோ -- மாளாநோய்ப்
பீடிக்கும் மஞ்சம் கிடத்துமோ மானவேல்
நீடிக்கும் ஆலி நிகழ்த்து.
87)
நிகழ்த்தும் மிசைநிற்கும் நிட்டையில் நீளும்
அகழ்த்தும் நெடிதுயிர்ப்பில் ஆகம் -- புகழ்மலியும்
காமர்ப் புகூர்த்தாதைப் பொற்கழலே காமம்தான்
சேமமாய்ப் பூண்ட சதம்.
88)
சதமகனார்க் கேள்விக்குச் சத்தியத்தில் வீழ்ந்தான்
சதமிதுவும் காட்டும் சமிக்கை -- நிதமிதுவே
தன்னொப்பாய் ஆக்கும் தனில்மிகுக்கும் தன்சேய்க்கே
என்னொப்பு தான்தருக்கும் தாய்.
89)
தாயாகி நின்று தமிழீந்தான் சேவடிக்கே
ஓயாமல் நாமியற்றும் கைங்கரியம் -- ஏய்ந்த
உடையவர்தம் கீர்த்தியினை உள்ளத்தில் வைத்தான்
அடையவளைத் தான்செம் பொருள்.
90)
பொருளென்று வாழ்வில் புகழாய் நிலைத்தான்
அருளென்றே இன்புறுநல் அன்பர் -- மருளகற்றி
மாணப் பெரும்பொருளே மன்னவைத் தானுளத்தில்
காணற் கரியதந்த ஈடு.
91)
ஈடும் எடுப்புமில் எந்தையும் ஈன்றதாயும்
தேடும் பொருளுக்கே பூட்டாமல் -- நாடுங்கால்
நல்லனவே சீர்மைக்கு நன்மை குணம்நாடி
நில்லெனவே ஊக்கம் அருள்.
92)
அருள்மாரி பாணன் புகழ்மழிசை ஐயன்
குருகூர்ச்சேய் தேடுகவி நாடாள் பெருமாள்
திருமாலைத் தொண்டனுடன் பட்டனருள் கோதை
அருளோடும் யோகியரும் மூன்று.
93)
மூன்றென்றும் மன்னும் பொருளாகும் முத்திக்கே
ஊன்றென்றும் உள்ளத்துக் காதல்தான் --ஈன்றவள்சேய்
ஊட்டும் இயலொத்திங் குண்மையை ஈந்திட்டான்
ஏட்டில்நம் லோகா ரியன்.
94)
இயன்ற வழியெல்லாம் நற்பொருளை ஏற்றுப்
பயிலும் உளத்தன்பின் வந்தோன் -- குயின்ற
பனுவல் குருகூரன் உள்ளத்தைப் பேணி
அனுதினமும் தந்தான் அமுது.
95)
அமுதிலும் ஆற்ற இனிதாகும் ஆண்டாள்
சமுதாயப் பாவைக்கே சாற்றும் -- அமைந்த
உரையதற்கே உள்ளமெலாம் ஆழ்ந்திடுவர் சான்றோர்
புரையற்ற போதம் தெளிந்து.
96)
தெளிவந்தும் தேராதும் நம்மாழ்வார் தாள்கள்
களித்தும் கலியொழித்தோம் கண்ணா -- விளித்தாலும்
கேளாய் வியன்ஞாலம் கூடித் திருவடிக்கே
ஆளாய்ச் சதிர்த்தாலும் என்?
97)
என்னேநாம் பெற்றிட்டோம்? எண்ணில் வலத்தாராய்
இன்னேயாம் பெற்றுவந்தோம் தேசிகரை -- மன்னியிடும்
வேதத் தரும்பொருளை வித்தகமாம் நூற்கடலைப்
போதத்தீம் பாணன் உரை.
98)
உரைகடந்த மாட்சி உளமெல்லாம் ஆண்டு
கரையில்சீர் மாமுனிவன் தன்மை -- நிறைகுணத்தான்
ஓங்குபுகழ் ஈட்டை உரைத்தான் அரங்கர்க்குத்
தாங்குமவன் தாளென் மனம்.
99)
மனத்தின்கண் நின்றகலான் மாட்சியிலும் முன்னோன்
எனைத்திங்கள் ஊழி உரைக்கில் -- அனைத்தேயாம்
ராமா னுசனென்று நாடுவார் நல்வாக்கே
ஓமென்ன லாகும் செவிக்கு.
100)
செவிக்கினிய செஞ்சொல் சடகோபன் தாளைப்
புவிக்கினிதாய்ப் போற்றுவர் சான்றோர் -- கவிக்குக்
கதையுமதன் உட்பொருளும் கண்ணனே ஆவான்
சுதையுருவம் ஆகுமிப் பார்.
***