Saturday, February 27, 2016

செராதோ பாந்தனால்

நடந்து முடியா நிலப்பரப்பு
பறந்து முடியாச் சதுப்பு நிலம்
திரிந்து முடியாப் புல்விளைப் பைங்கால்
செராதோ பாந்தனால்
பெருநாடன்ன பரவிய சதுப்பில்
உருவாகும் உயிர்கள்
ஓராறு மாதம் கடுங்கோடையின் வறட்சி
மறுவாறு மாதம் பெயலின் மிரட்சி
நிலத்தின் மனத்தில் நெருடும்
உளவியல் பிளவன்ன பருவப் பிரிவினை
வறண்டு காய்ந்த புல் தரை
முதல்கார் மின்வீழ் வெப்பில்
பற்றித் தீ படர்ந்த அக்கினிக் கொடியும்
சுற்றும் காற்றினைக் குடித்துப்
பேயென நகரும்
நீர்மையற்று வாடிக் குவிந்த
சருகுத் தரைகள்
சத்தினை இழந்த தாவரம்
நொடித்த மரங்கள்
நொய்ந்த வளர்ச்சி
நெருப்புக் கொடியால்
நீவிய நிலப் பரப்பு
கரிக்கோடிட்டுச் சுழல் வளி ஆடும்.
புற்கள் காய்ந்து கலுழ்ந்த தரையும்
அரும்சுரம் அன்ன கடுங்கால் வீச
உரும் இடி உரப்பிற்கு ஏங்கும்;
ஒரு பெயல் மறு பெயல் தொடர் பெயல்
எங்கும் மீட்டுருவாக்கம்
பதுங்கிய உயிர்கள் பூக்கும்
ஒதுங்கிய உயிர்கள் உணவிற்கு அலையும்
மடிந்தவை மறுபிறப்பன்ன தொடர்ச்சியில் தழைக்கும்.
பரந்து அளந்த தீயின் கரிக்கால்
புற்றினுள் கரையான் புவிக்கீழ் வாழ்வைத்
தொடும்திறன் இழந்த நகையாய்ப் பொங்கிப்
புற்றென எழுந்து கோட்டையாய்ப் புல்நிலம்
புள்களின் வேட்டையாய்,
நோட்ட மாடமாய்
எறும்புணும் விலங்கின் இன்சுவைக் கூடமாய்
அரும்பிடும் காட்சி அளவிலதாகும்;
வெள்ளம் கொணரும் பல்வகை மீனினம்
விரிமுக முதலைகள் வாயினில் தப்பி
உயர்முக நீரினுள் ஒளிந்தவை பிழைக்கும்;
சதுப்பினில் அளைந்த பன்றிவகைகள்
குதுகலம் மிக்குக் கொள்ளை நீரில்
ஒயிலாய் நீஞ்சும் போதுதான்
மூர்க்கமாய் நீந்தும் மலைப்பாம்பு விழுங்கும்;
ஓராறு மாதத்தில் ஒரு யுகம்
எழுந்து முடியும்
அரையாண்டுப் பிரளயத்தில்
அனைத்துமே சுழலும். 

*

No comments:

Post a Comment