Friday, February 26, 2016

உறவு

உயிர் தோன்றி வளரும் போது
உறவுகள் அமைந்திருக்கின்றன.
உறவுகளைச் சொல்லிச் சொல்லிப்
பாசத்தை வளர்க்கிறோம்.
தந்தை என்றதும் பெரும் உலக அரணாக
நிம்மதி அடைகிறோம் குழந்தைமையில்.
தாய் என்றதும் தடையற்ற அன்பின்
ஜீவ நதியாகக் களித்துக் குளிர்கிறோம்
சேயென்ற காலம் தொட்டு.
அண்ணன், அக்கா, தங்கை, தம்பி,
சித்தப்பா, பெரியப்பா, சித்தி, பெரியம்மா,
மாமா, அத்தை, பாட்டி, தாத்தா
என்று என்று உறவின் கைகள்
காலக் கொழுகொம்பில்
கொடிகள் போல் படர்ந்து
உறவின் மரம் உயிரில் வேரூன்ற
ஊற்றிய பாசம்
உறவின் பரஸ்பரங்களின் உரத்தோடு
ஒன்றி உணர, உணர்ந்து,
உணர்ச்சி கொண்டு ஒன்ற
நாம், நமது, நாங்கள், எங்கள் என்ற
உறவு கெட்டித்த
தன்மைப் பன்மைகளாய்ப்
பெருகிய அடர்த்தியில்
என்றேனும், என்றோ,
உணர்கிறோமா, உணர்வோமா
'இவை பொய்.
இவை வெறும் நாடகம்
சுய லாபக் கணக்கு
முடைந்தெடுத்த வெற்றுப் பூச்சுகள்'
என......
அருள் பூத்த கவிகள்
உடலெல்லாம் வாய்கொண்டு
அலறினாலும்
உணரும் போது 
நிதர்சனமாகும் வெறுமை
அந்த வெறுமையின்
மெய்மை அமிலத்தில்
கரைந்து மறையும்
உறவின் முடைந்த
பொய்ப் புறப்பூச்சுகள்
சிரிப்பொன்று வாய் வேண்டாது
தானே படர்ந்து உலகூடு ஊடாடி
நமை நோக்கி வரத்தொடங்கும்
ஸ்தம்பித கணம் ... 
ஊரும் சதமன்று;
உற்றார் சதமல்ல;
உறவுகள் பொய்
என்பது உண்மையப்பா. 
பக்குவம் வருவதற்குள்
பொட்டிப் படுக்கை கட்டுகிறோம்
பக்கத்தில் நமனிருக்கப்
பார்சுமக்க நாமிருக்க
அக்கப்போர் அத்தனையும்
ஆலவட்டம் இட்டிருக்க
வெட்கங் கெட்ட பிழைப்பினிலே
விளங்காத விரசம்தான்.

வீறாப்பால் என்ன பயன்?
ஆண்டியாய்ப் போனாலும்
அரசமரப் பிள்ளைக்குப்
பேச்சுத்துணை யானாலும்
பூசிவைத்த ஜிகினா
பொடியாகிப் போகையிலே
ஏசிவரும் விரசத்தில்
எக்குரலும் எடுக்கலையே.
வேடிக்கை பார்த்திருப்போம்
பாழ்வெளியாம் கிணற்றினிலே
பக்கெட்டுக் கயிறுவிட்டு
பக்குவமாய் அமைதியினைப்
பெற்றுவப்போம் நன்று சொன்னீர்
பவப்பகலின் கடுவெப்பில்
கிணறுகாய்ந்து நாளாச்சு
பக்கெட்டும் ஓட்டை
பல்லிளிக்கும் கயிறோடு
போராடும் வேளையிலே
பேச்சுத் துணையுண்டோ 
பொன்னரங்கா நீ புகலாய். 

***

No comments:

Post a Comment