Saturday, February 27, 2016

அந்தி

அந்தி
மேலைத் திசையெங்கும்
நீண்டு நிவந்து ஓங்கிப் பரந்த மலைத்தொடர்
பருவங்கள் பலவற்றை
ஒரே நேரத்தில் தொட்டிலாட்டும்
அங்கங்கே விண்முட்டும் சிகரங்கள்
பருவங்கள் கொடுமையாய்ச்
செங்குத்தாய் மாறும்
குறுகிய கால இடைப்போது
நடுநடுவே புவியடுப்பில்
சுட்டெரிக்கும் கொதிநீர்
ஓரடி எடுத்து வைத்தால்
அப்புறமோ உறைபனி
இரண்டின் இடைக்கோட்டில் நின்றே
உயிர்கள் தம்மைப் பேணும்
மயிரிழை, தப்படி, தடுக்கிவிழல்
ஒன்று கொதி மரணம்
அல்லது உறைமரணம்
ஆபத்தின் இடைகழியில்
ஜீவித ரேகை.
செல்லும் நதியும்
சமயத்தில் உறைந்து விடும்
துள்ளும் உணவும்
பனிக்கடியில் மறைந்துவிடும்
உணவுக்கேங்கி உறைபனி குத்தும்
புள்கூட பனிப்படுகை பொன்றிவிடும்
ஓடியதும் விரட்டியதும் ஒன்றாய்ச் சாகும்
வெப்பம் வந்து உருக்கியதும்
தேடி அவை சுவைக்கத்
தேடி வரும் விலங்கு
நோட்டம் இட்டு வரும் பூதக் கழுகு
காலம் இவற்றுக்குக்
கடிகாரம் திருகி வைக்கும்
ஓலமிட்டு என்ன பயன் என்றே
ஒன்றிற்கொன்று உணவாகி
ஒரு கால நதியில்
நுழைந்து வெளியாகி
உயிர் மரணம் என்ற இசை
உருவாகும்
இசை மீட்டும் ஒன்றும்
இசை கேட்கும் ஒன்றும்
இல்லை என்ற திரை விட்டுப்
பின்னால்
மெல்ல சிரிக்கின்ற மர்மம்
அல்லின் நாப்பண் புலனாகும். 

*

No comments:

Post a Comment