குகை என்று சொல்ல முடியாது.
கோளம்.
24 பொருட்களால் ஆனது.
வெளியில் தொங்குகிறதா?
கீழே விழுந்து கொண்டிருக்கிறதா?
மேலே எங்கேயோ போகிறதா?
தெரியவில்லை.
வெளியில் ஏதாவது இருக்கிறதா?
வெளி என்று ஏதாவது இருக்கிறதா?
தெரியவில்லை. ஏனென்றால்
காலம், தேசம், வர்த்தமானம் ஆகிய மூன்றும்
இந்தக் கோளத்துக்குள்தான் தாங்கிகளாக இருக்கின்றன.
கோளம் எல்லாப் பக்கத்திலும் மூடிக் கிடக்கிறது.
கோளத்துக்கு வெளியில் யாரும் போனது இல்லை.
போக வழியும் இல்லை.
வெளியிலிருந்து
யாரோ எந்தக் காலத்திலோ
வந்து போனதாகவும், உள்ளிருப்பவர்கள் யாரோ
எப்பவோ
வெளியில் போய்த் தெரிந்து வந்ததாகவும்
உள்ளே இருக்கிறவர்கள் சேதி
சொல்லிக் கேட்பதுண்டு.
இன்னிக்கும் பல பேர் வெளியில் போக முயல்வதும் உண்டு
சில பேரை வெளியில் இருந்து வந்தவர்கள் என்று
பலர் சொல்லிச் சுற்றி உட்கார்ந்து கேட்பதும் உண்டு.
ஆனால் வெளியில் போகவும் வழியில்லை.
உள்ளே வரவும் வழியில்லை.
வந்ததாகப் போனதாகச் சொல்வதில் ஒரு திருப்தி
எங்கேயோ உடைத்து விட்டு வெளியில் இருந்து ஓர் ஒளி
உள்ளே வந்ததாக அகல் விளக்கு ஏற்றிச் சுடரும்.
மூலைக்கு மூலை அப்படி ஒளி வந்த நினைவுக்கு
அகல் விளக்குகள் எரிகின்றன.
ஆனால் எல்லா அகல் விளக்குகளும்
வெளிச்சம் தருவது என்னவோ
கோளத்தின் உள்ளே இருக்கிற பிரதேசத்துக்குத்தான்.
கோளத்துக்கு வெளியில் என்று கேட்டால் ....
இன்னும் பெரிதாகக் கோளம் போட்டுக் காட்டுகிறார்கள்.
என்ன வழி ....?
***
No comments:
Post a Comment