Saturday, February 27, 2016

போதிமரப் பா

பூங்காற்று வீசியெழில் பூந்தாது வீசியெங்கும்
ஏங்குகின்ற உள்ளமென ஏற்றும் இயற்கையெலாம்
தாங்குளிரத் தாபம் அகற்றித் தவமுனிவன்
ஓமொளிர உள்ளடங்கி உட்கார்ந்த பெற்றியென
ஓங்கிப் படர்ந்தே உருவான மௌனத்தில்
தாங்கிக் கிளைபரப்பித் தான்நின்ற போதிமரம்
ஏனோ சிரிக்கிறது ஏதேதோ சொல்கிறது
வானும் கவிந்து வெறிச்சோடிப் பார்க்கிறது
கானத்துப் புள்ளெல்லாம் கேளா ஒலிக்குறிப்பில்
போதிமரப் புன்சிரிப்பின் பூடகத்தில் கூடடங்கிச்
சோதித் திருவாய் மலரச் சுகங்காக்கும்
சுந்தரப்பொன் வட்டில் சுவர்பொங்கிச் சோதியெழ
அந்தரத்தில் ஆதவனார் ஆகாசப் பாய்விரித்தார்
நள்ளிரவில் நீர்மையினால் மண்குளிர்ந்த வாடையெங்கும்
வள்ளல் விரிகதிர்க்கு வேளாண்மை செய்துவக்கும்
பள்ள மடையாகிப் பாய்கின்ற நீர்சுமக்கும்
தெள்ளு கயமாகித் தீங்கதிரைத் தான்சுமக்கும்
எள்ளி நகையாடி ஏய்க்கும் உலகுதனின்
கள்ளம் வெளியான காரணமும் புன்சிரிக்கும்
தானென்ற ஒன்று தனியாக இல்லையென
நானற்ற நல்கணத்தில் நிர்வாணம் ஆகிநிற்கும்
போதி மகத்துவத்தின் பொல்லாங்கு புன்னகைக்கும்
போதி மரத்திற்கே போந்த பொருளதனை
வாதித்துப் பெற்றிடவே வாக்கதுவும் நாணிநிற்கும்
சேதி உரைத்திட்டுச் சையோகச் சைதன்யம்
மீதி உரைப்பதற்குள் மௌனக் கருவாய்க்கும்
ஆதியொடு அந்தம் அகத்தினிலே கண்டுவந்த
போதிப் பெருமகனார் போந்தபொருள் கண்டதனால்
ஓதும் பெருமரத்தின் ஓங்கு தருநீழல்
விட்டகன்ற வக்கணத்தே எட்டுத் திசையெழுந்த
அட்டகாசத் தொன்றாமிப் பா. 

***

No comments:

Post a Comment