அன்று கொஞ்சம் அதிகமாகவே தூங்கி
அப்புறம் எழுந்து, தூய்மைகள், குளியல் எல்லாம் முடித்து
டீ போட்டுக் கொண்டு உட்கார்ந்து
எண்ணக் குமிழி எழுந்து படர்ந்து பெருக
சிறிது நேரம் அமர எண்ணி ...
அமர்வதற்குள் வெளியில் பார்த்தால்
பட்டாடை உடுத்தி மக்களின் பரபரப்பு
என்ன ஏது என்று கேட்டால்
பக்கத்து வீட்டில் பெருமாள் வந்திருக்கிறார்
நீங்க சேவிக்க வரவில்லை?
சமையலறைக் கதவைத் திறந்து
அந்தப் பக்கம் பார்க்கலாம் என்றால்
அலுங்காமல் நலுங்காமல்
அத்தனை பீடும் திகழ
ரங்கன்
என்னடா சோம்பேறி என்று என்னைக்
கேட்டபடி .....
ஒரு கணம் தூக்கிவாரித்தான் போட்டது..
அந்த ஆள் நிச்சயம் என்னை
வேவு பார்க்கத்தான் வந்திருக்க வேண்டும்
வேவு என்ன ..
என்றும் எப்பொழுதும்
பார்க்கத் தவறா ஓர் ஆள் ....
நிச்சயம் என்னோடு பழகுவது
அவனுக்குப் பிடித்திருக்கிறது போலும்
பலருக்கு என்னோடு பழகப்
பிடிக்கவில்லை என்பது வழக்கம்
ஆனால் இந்த ஆள் .. ஏன் ...
ஒரு வேளை புதிதோ...
போகப் போகச் சாயம்
வெளுக்கும் போலும்...
புதிதா....
என்றென்றிலாமல்
ஆதி முதல் வரும் நட்பு ..
அந்த ஆளுக்கு நிச்சயம் என்னுடன்
பழகப் பிடித்திருக்கிறது
இல்லையென்றால்
நேரம் கெட்ட நேரத்திலெல்லாம்
ஆளை எழுப்பி
ஊரில் நாய்கூட நடமாடாத
காலத்தில் என்னை அழைத்து
அது என்ன ஒரு பாசமோ
பாவம்! என்ன ஒரு நேசம் ...
போதும் என்று சொல்ல
எனக்கும் தோன்றவில்லை
போக்கிரி என்று அவன் சொல்வது
காதுக்குக் கேட்கிறது
ஆனால் கண்ணில் தெரியவில்லை
காதுக்கா... ம் .. ம் கருத்தின் செவிக்கு ...
என்று வைத்துக்கொள்...
அன்று வந்ததும் டீயை ஒரு டம்ப்ளரில்
ஊற்றி அவனுக்கும் கொடுக்கும்
ஓர் உந்தல்...
நல்ல வேளை மண்ணுருண்டைத்தனம்
வந்து காப்பாற்றியது
’எல்லாம் நமக்கு அப்படித் தோன்றுகிறது..
யாரோ உபயம் போலிருக்கிறது
அதுதான் பெருமாள் அங்கு
எழுந்தருளியுள்ளார்... ’
மண்ணுருண்டைத்தனம் காப்பாற்றியது
இல்லையென்றால் ஓர் மெல்லிய சவ்வு
அறுந்தால் அவ்வளவுதான்
மனிதர் ஓவரா படிச்சு
மூளை கலங்கிட்டார் சார்
டம்ப்ளர்ல காப்பியை ஊற்றி
பெருமாளிடம் போய்க் குடி குடி .. என்று
சுத்தப் பைத்தியம் சார் ....
இப்படி தனியா விடக் கூடாது..
ஆமாம் பார்த்திருப்பாங்க ....
சனி எப்படி வைச்சு சமாளிக்கிறதுன்னு
தொரத்திவிட்ருப்பாங்க ....
இந்த மாதிரியான பேச்சுகளுக்கு
இலக்காகி நகைச்சுவைக்கு விற்றுக்
கதை கந்தல்தான் ...
’மண்ணை இருந்து துழாவி
வாமனன் மண் இது என்னும்....’
***
No comments:
Post a Comment