Saturday, November 18, 2017

செயலின் நன்மை

செய்த செயலின் விளைவிலிருந்து
யாரும் தப்புவதில்லை.
செயல் செயலின் விளைவுகள்
என்னும் சங்கிலி அறுபடாமல் சுழல்கிறது
ஐயோ என்று அழுபவர்
அழிவைப் பயிர் செய்யும் காலத்து
அகங்கார போதையில் எதையும் உணர்வது இல்லை;
ஆனால் எதைச் சொல்லி அழுதாலும்
வேடிக்கை பார்த்தபடியே வினைச் சுழலம்
சுழல்கிறது அதன் பார்க்கும் கண்கள்
பரிதாபப்பட அமைக்கப்படவில்லை.
யாரும் பார்க்கவில்லை என்று
தீமை புரியும் ஒருவரைப்
பஞ்ச பூதங்களும் பார்த்து நகைக்கின்றன.
வானில் ஈரம் இருக்கிறதா
காலத்திற்குக் கண் இருக்கிறதா
என்றெல்லாம் ஏங்கும் மனிதர்
முன்பு தீமை புரியும் காலத்தே
தம் கண்ணையும், நெஞ்சின் ஈரத்தையும்
எங்கே தொலைத்தனர் அகங்கார வெறியில்?
எங்கோ தொடக்கம் இந்த நெடுஞ்சாலை
எங்கோ போகிறது
எங்கு முடியும் என்று எவரே கண்டார்
தொடங்கும் முன்
முடிந்த பின்
என்ற நிலைகளைக்
கணக்கிட்டுப் பேசிக் காலம் போக்குவதற்குப் பதில்
இன்று இப்பொழுது இக்கணம்
செயலின் விதியை உணர்ந்து நின்றால்
நன்மையின் நனவில் அடங்கி நின்றால்
அவை அவை என்னவாய் இருந்தால் என்ன
நன்மைதான் விளையும் என்ற விதி
இன்றைய கணத்தில் சுழலும் அன்றோ!
அடக்கத்தின் அமைதி ஓரார்
அழிவிற்கே அடிமை பூண்டார்
திடமாகத் தொடரும் வினையின்
சுழன்றிடும் வட்டம் தாண்ட
அடம் பிடித்து ஏதோ செய்வார்
அம்மவோ கொடியவாறே! 

*** 

No comments:

Post a Comment