Friday, November 17, 2017

அன்னை மீது

நாடும் நகரமும் நன்மையுற் றோங்கிடவே
ஏடும் எழுத்தும் இவையளித்தாள் - சூடும்
பணிமுற்றப் பாரின் தரமுயர்ந்தே பூன்ற
குணமுற்றுக் கூடும் உயிர். 


உயிருள் உறவாகி ஒண்ணலத்தே உய்ப்பாய்
பயிலும் பரநலத்தின் போதம் - துயிலும்
பொருளில் கிளர்ந்து புலத்துயிராய்ப் போந்தே
அருளே அகிலமாதற் கே. 


தோமிழைத்தோ மந்த தொன்மைப் பேரொளியை
நாமறந்தோம் நன்மை தனையிழந்தோம் - சேமம்
ஒருநாளும் தான்மறவாள் ஓர்காப்பாய் நிற்பாள்
அருளுக்கே ஏது நிகர்? 


கலைமகளே
கனிவுதரும்
அருள்மகளே
அலைகடலாய்
உலகில் நிலை
இலையாகி வினை
மலையாகி மலைப்ப
நிலையான ஞானம்
விளைகின்ற வேளை
அளைகின்ற இருளிரிய
முளைக்கின்ற செங்கதிராய்த்
தழைக்கின்ற பைந்திவமே
அழைக்கின்ற குரல்செவியில்
விழைகின்ற சேயினுளம்
மழைக்கேங்கும் நிலமாகிப்
பிழைக்கின்ற வழிதேடும்
பொழுதைக்கு ஏய்க்காமல்
முழுதுமுனதருள் நோக்கம்
விழுதெனவென் னிதயத்தில்
உழுகின்றவிளைவாகி உன்பால்
உழுவலன்பே பெருகிடவே என்பால்.

***

No comments:

Post a Comment