Friday, November 17, 2017

அன்னையின் பதமலர்

அன்னையின் பதமலர் பணிந்தேன்
மன்னிய நெறியில் மனம்பதிந்தேன்
விண்ணும் வந்துநிதம் நம்மண்ணில்
கண்ணாய்க் காக்கும்விதம் உணர்ந்தேன்
உன்னற்கரிய உயர்நிலையில்
அன்னையருள் பொங்கிவரும்நம் உயிர்நிலையில்
எண்ணற்கரிய இயல்சக்தியவள் சரணம்
மண்ணில் எழ விண் இசையும் தருணம்.

*
ஒளிந்திருக்கும் அசுரர்
அன்னையின் கண்ணுக்குத் தப்புவதில்லை;
உண்மைக்குப் பகைவர்
அன்னையின் கடுமைக்குத் தப்புவதில்லை;
புன்மை கடியும் பராசக்தியாய்ப்
பொய்மைக்குப் பகையாய் மகாசக்தியாய்ப்
பூரண அருளாய் விளங்கும் அன்னையே
விளங்குக நெஞ்சில்;
தஞ்சம் உன் பொன்னடி தாயே சரணம். 

*
மந்திரம் அறியேன்
யந்திரம் அறியேன்
மனம் வாக்காகத்
துதிக்கவும் அறியேன்
உன்னை அழைத்திட அறியேன்
உன்னி உணர்ந்திட அறியேன்
பன்னி நின் கதைகள் பேசிட அறியேன்
முத்திரை அறியென்
முறைப்படி வழிபட அறியேன்
பரத்தினில் ஒளிர்வாய்
பாரினில் வதிவாய்
பராசக்தி உன் கருணையினால்
என் துன்பங்கள் தீர்ப்பாய்
துணையாய்க் காப்பாய்
தஞ்சம் தாயுன் தாளிணையே! 

*
அம்மாவின் திருப்பாதம் 
தங்கும் உள்ளம் மலர 
அறிவாகி ஆனந்த உருவாகி 
அருளின் வடிவாகி வந்த தருணம் 
மிருதனாய்ச் சரண் என்று விழுந்தவனை 
அமிருதனாய் எடுத்த கருணை பொழிமுகிலாய்ப் 
புத்துயிராய் ஆண்ட தாயே 
ஆண்டெல்லாம் ஆண்டு அருள்வாய் நீயே !


*
துதிசெய்வோம் அன்னையே 
கதியெமக்கு நீயே 
வதிகருணை வதனத்தில் 
பதிகின்ற அருள்பார்வை 
மதியில் தூய்மை தந்திடட்டும் 
உதிக்கின்ற தெய்வசத்தி 
உரைக்கின்ற தீரபுத்தி 
நிறைக்கின்ற மஹாசக்தியே!
ஐயோ எனும் குரலுக்கு 
அநுமதிச் சீட்டெண்ணி 
அனுமானம் எண்ணிடாமல் 
வையத்தில் அக்கணமே 
காக்கின்ற அருட்கரத்தில் 
பூக்கின்ற புதுமலராய் 
ஏந்தி நிற்கின்றாய் எம் ஆவியைச் 
சாந்தியும் சுகவளமும் சந்துஷ்டியும் 
தந்தெம்மை ஆநந்த நிலையும் தந்தாய் 
ஆனந்தமயீ சைதன்யமயீ 
அனைத்துயிர்க்கும் தாய்நீ! 
அனவரதம் துதிகற்கும் 
எம்மிதய மலர்வீற்ற 
அம்மா என இறைஞ்சுவோம்.



*
நிர்க்கதியாய் விழும்
ஜீவருக்கு
முகம் கொடுத்து
கைகொடுத்துக்
காப்பாற்றும்
தப்பாத அருளாம்
தெய்வத் தாய்மைக்கு
கரிக்குலவிட்டேயும்
பயோடேட்டாவும்
பயிற்சிமுகாமும்
திட்டமிட்டுத்
திட்டமிட்டுத்
தொலைத்த காலம் எண்ணி
அயரும் நிர்மூடம்
முகம்பார்க்கும்
கண்ணாடிக்குள்ளும் தெரிகிறது.
மொத்தத்தில்
முட்டாள்
இதிலென்ன
எட்டு ஆள்?


***

No comments:

Post a Comment