பேருந்து ஒன்று செல்கிறது
பயணத்தில் ஓர் உயிர்
பேருந்து ஒன்று செல்கிறது
நாறுகின்ற இடத்தில் வேண்டாத வேளையில்
பையப் பைய ஊர்கிறது
பேருந்து ஒன்று செல்கிறது
வேண்டும் பொழுதோ
விரைகமழ் மணக்கும் இடங்களில்
விரைந்து விரைந்து போகிறது
வேண்டுமென்றே செல்கிறது
வேண்டாதவற்றை நீட்டி
வேண்டும் அவற்றைக் குறுக்கிப்
பேருந்து ஒன்று செல்கிறது
போய்ப் பார்த்துச் சொல்ல என்று
பயணி எழுந்து போனால்
திறந்து அந்த ஓட்டுநர் காணச் சென்றால்
ஓட்டுநரே இல்லை அங்கே
ஓட்டுநரே இல்லாமல்
பேருந்து செல்கிறது
பதறிப் போய்த் திகிலடைந்து
கையுதறிக் காலுதறி ஒருவழியாய்
இருக்கை வந்து அமர்ந்தார்
ஓட்டுநர் இல்லாமல் ஓடும் பேருந்து
இறங்கவும் வழியில்லை
இறங்கவரும் காலம்வரை
மனத்தில் ஓர் கருத்து
இனி குற்றம் சொல்ல எவருமில்லை
வேண்டும் என்று செய்வாரும் இல்லை
விருப்பம் விரைகிறது
வேண்டாமை பைய ஊர்கிறது
நிம்மதியில் கண் ஆழ்ந்தார்
அமைதியில் தியானம் ஆழ்ந்தது
பார்த்தாலோ...
விருப்பங்கள் வெறுப்புகள் எல்லாம்
நரம்பு ஊர்வன பேருந்துகளில்
சென்றனைத்தும் கொள்முதலாய்க்
கணக்கிடும் தான் என்னும்
பயணிக்கும் ஆளான தன்னைத் தேடி
உள்ளே போனார்
ஒவ்வொரு மண்டலமாய்க் கடந்து போனார்
உள்ளிருக்கும் உயிர்க்கதவைத் தட்டித்
திறந்து காண....
பயணிக்கும் ஆள் என்று யாரும் இல்லை
விருப்பு வெறுப்பில் உழலுகின்ற
ஓர் ஆள் தேடி
உள்ளிருக்கும் காமிராவுள் எல்லாம் கண்டார்
ஓர் ஆள் இல்லை
காணவந்த தான் யார் என்றால்
என்ன இது... இருக்கின்ற இருக்கை விட்டு நகரவில்லை
பின்.. தேடுகின்ற தான் இல்லை
உள் இருக்கும் ஆள் இல்லை
ஓட்டுகின்ற ‘நர்’ இல்லை
பயணிக்கும் ஆள் கொண்டு
போகின்ற பேருந்து
பயணிக்கும் ஆளோ
நரம்புக் கொல்லையினில்
நட்டு வைத்த வைக்கோல் பொம்மை
.......................................
...அதிர்ச்சியெல்லாம் அடங்கிய பின்பு...
யாருக்கு என்று இல்லாமல்
அமைதி மட்டும் நிறைந்தது ஆங்கே
அன்பு மட்டும் கனிந்ததுவால் !
***
(அஜன் ப்ரம்மவம்ஸோ உரையில் கேட்ட கருத்து ஒன்றை விரித்து எழுதியது)
No comments:
Post a Comment