Tuesday, November 23, 2021

லாவணி

எரிந்துவிட்டான் எரியவில்லை 
இரண்டிலொன்று முடிவு காண எழுந்து சென்றேன் 
நள்ளிரவில் பந்தம் நட்டு 
நடுவானப் புதுப் பந்தலிட்டு 
நாச்சிமுத்தும் பேச்சிமுத்தும் கட்சியிட்டுத் 
தங்கய்ய ஆசாரி தொடர்ந்து பாட 
லாவணியின் விறுவிறுப்பில் 
காளியே மலைத்துப் போய் வாய் திறக்க 
ரவுண்டடித்து ரங்கன்மணி கம்பத்தில் கால் தூக்க 
எரியாத மன்மதனார் ஏற்றி வைத்த விஷமத்தால் 
புரியாத விழிப்பில் பூங்குறும்பு செய்தவளை 
எரிந்த மன்மதனாய் எவர் கண்ணும் காணாது 
நழுவி நகர்ந்து நடுகோபுரத்து உள்ளொடுங்கி 
முக்கண் கனல் மூட்டி 
முன்னுதட்டில் ரதி எரிய 
முறுவலித்த சாம்பலிலே 
மாகாளி கண் எரிய 
எரிந்ததா இல்லையா 
என்னாயிற்று என்று கேட்டு 
எங்கோ ஊர்முக்கில் கழுதை கதறியழ 
எக்கேடு கெட்டால் எனக்கென்ன 
என்ற நாயூளை 
நடுத்தெருவில் கட்டில் கிழத்திற்கு 
நாராசமாய் ஒலிக்க 
நடுங்கும் கைக்கல்லும் நாலிடத்தில் மோதி 
வீட்டுக்கூரைத் தகரத்தில் பட்டுருளத் 
திருடன் என்று திடுக்கிட்டுக் கத்தியதால் 
திரண்ட கூட்டம் மாடியெல்லாம் தேடிப் பார்க்க 
மாகாளிக் கோயில் மதிற்சுவரில் பூசாரி 
முழுபாட்டில் அடித்து 
முன்னணைத்த சுருட்டேற்றி 
எரிகிறதா என்றிழுத்துப் பார்க்கத் 
தெருவிளக்கு தேய்ந்து அணைந்தணைந்து 
மன்மதனார் லாவணிக்கு 
மறுபக்கம் ஆனதுவே. 

***

No comments:

Post a Comment