எவரும் சொந்தமாக இல்லை
எவரோடு எவரும் ஒட்டுவது இல்லை
ஆனால் உண்மையை மறைக்கத்தான்
எத்தனை பூச்சொரியல்!
அந்தப் பூவிலும் இதழ்கள் பொருந்தாமல்
பூக்களின் குட்டுடைக்கப்
புலனறியும் வண்டுகள்
பார்வையின் ரகசியத்தில் பாதிவழி தாண்டிப்
பின்மயங்கித் தேனுண்டு திரும்புகின்றன.
தொப்புள் கொடியறுத்துத் துடைத்துவிட்ட
சேயைத் தொட்டுத் தொட்டு
முத்தமிடுகிறாள் தாய்
பட்டுணர்ந்த திகைப்பில் பிரமை கிழியப்
பட்டவர்த்தனமாய்ப் புலனாகும் மெய்
மூடிவைக்கும் மும்முரத்தில்
மூட்டித் தைக்கும் முனைப்பில்
மூடாத வானத்தில்
மூட்டி வைத்த விளக்குகளாய் விண்மீன்கள்
பகல்பொத்திக் காணக் கிடைக்கும்
இரவின் கண் மறைத்த காலை
கதிரில் கரந்து உலகெங்கும் உறவாய்ப்
பூசி வைத்த வெளிச்சத்தில்
ஒளிந்து சிமிட்டும் ஒற்றைக் கண்கள்.
***
No comments:
Post a Comment