உன்னை யார்
உன் சமுதாய வரலாற்றினின்றும்
வழுக்கி விழச் சொன்னது?
அன்றேல் விட்டெறியக் கூறியது?
அறிவின் நுட்பத்தைச்
சொல்லின் அமைப்பில் வைத்தால்
அகத்தின் நுண்ணெகிழ்வைச்
சொற்களிடைத் தேக்கினால்
சுகத்தின் உச்சத்தில்
சுய ஸ்தானத்தில்
சுதந்திரமாய் இருக்க வக்கின்றி
வழிப்போகும் வக்கிரத்தின் தூண்டுதலில்
உன் தலையை நீயே அறுத்தால்
வைத்துக்கொள்
தன் தலையைக் கொய்து
அதன் தலையோட்டுக் கபாலத்தில்
உலகெங்கும் பிச்சையேந்தித் திரியும்
முண்டமென அலை
என்றேனும் உறைத்திட்டால்
கபாலத்தை முண்டக் கழுத்தில் பொருத்திக் கொள்
பின் முன்னாய்ப் பொருத்தி விடாமல்
சரியாய்ப் பொருத்திச் சிரித்துக் கொள்
இந்தச் சுய இம்சை
தேவையே இல்லையென்று.
***
No comments:
Post a Comment