சிரித்துப் பொழுதயரும்
சமுதாயச் சாவடியில்
பிரித்துப் பொருளுணரப்
போராத போக்கிற்கு
உரத்த குரலெழுப்பி
ஒரு கொட்டாவி விட்டு
ஊர் பொங்கிச் சோறு தின்ற
உதிரும் இலைகிழித்துக்
குரைக்கும் நாய் முதுகில் பேன்பார்த்து
முழுநீலக் காக்கை
முறைத்துக் கரைவதிலும்
முறைவைத்து வம்பளக்க
முந்துமர இலைக்கூட்டம்
உரைக்காத ஒரு சேதி
ஓடுநதி கண்டுகொள்ள
உறங்கும் தலைமுறைகள்
உறுமுகின்ற தூக்கத்தில்
ஒரு கனவில் விழித்து
மறுநனவில் கண்ணயரும்
மானிடத்தின் சலசலப்பில்
மகத்தான பெருங்காலம்
கூழாங் கல்லுருட்டிக்
கூடவரும் பொழுதுருட்டிக்
கொண்டு சொருகி வைத்த
கடுஞ்சுழல்கள் எத்தனையோ
அத்தனையும் வழித்துணையாய்
மரத்துப் போய் மனவிழுதில்
மாற்றித் தலைசாய்த்து
மல்லாந்து செவி சாய்த்த
சிந்தை படிந்த செம்மண்.
***
No comments:
Post a Comment