Thursday, November 4, 2021

கிழக்கில் கவிதை

காலை விடிந்தது 
கிழக்கில் கதிரோன் கண் விழித்தமர்ந்தான் 
கொள்ளிடத்தூடே குனித்த பாலத்தின் 
முதுகில் கைவைத்து மண் மீதெழுந்தான் 
கொல்லைப் புனத்தில் 
கொத்தும் கிளி கடியக் 
கவண்கல் பூட்டிக் கதிர் வைத்தெறிந்தான் 
கார்மேக வானம் கன்றிச் சிவந்தது 
கனையிருள் ஓடிக் 
கரை மீதேறிச் 
சோலைப் புழையுள் சென்று ஒளிந்து 
கிளைகளினூடே எட்டிப் பார்த்தது 
மருவிப் புணர்ந்த வடுவாம் நிலவை 
மங்கல வானில் மேளம் கேட்டது 
மாயோன் மேயக் காடுறை உலகில் 
மருதம் இறுத்த மாலுணர் துயிலில் 
குன்றம் உயர்த்திய கொள்கைக் குடையில் 
கூடும் உயிர்க்காய்க் கடலைக் கடந்து 
கடலில் கிடந்து கடலுள் குடைந்து 
கடற்கரை கிடந்து காக்கும் கரியோன் 
கையென நெஞ்சில் 
கவிதை சுரந்தது. 

***

No comments:

Post a Comment