Saturday, November 13, 2021

தீயுண்ணாத் திறல்

கவிஞன் இருந்ததை நினைத்து 
ஆழ்ந்த உள்ளப் பேழ்வாய்ப் 
பேரார்வம் சொரிந்து 
அஞ்சலி செய்தோம் 
அர்ப்பணமாய் அன்பைப் பெய்தோம் 
வாழ்ந்தவன் மறைந்ததனால் 
வானுலகு தான் கவிந்து 
வரமாட்டான் என்றதனால் 
கனிவு மீக்கூர்ந்து 
கண்ணீரில் மிதந்து 
போன காலப் பொந்துகளில் 
புனிதம் கூடுகட்டியது 
மண்ணில் திரிந்தவரை 
விண்ணளந்த பெருமாள் 
மரித்து மண்ணளக்க 
மாண்பின் வளக்கை 
வான் குளக் கண்ணீர் வழித்தெறிந்து 
தானளந்த பரிதி 
விழுந்தெழுந்த கணக்கு 
வாழ் நாளாய்க் கோணாமல் 
கல்லறையில் முட்டியது 
கங்குத் தீ நக்கிக் கரியாகிக் 
காலத்தில் மரித்த உயிர் 
இறப்பில் உயிர்த்தெழுந்த 
அதிசயத்தின் ஆராய்ச்சிமணி 
சேகண்டி சிந்திச் சவத்திற்குப் 
பாதையெல்லாம் பறித்தமலர் 
இறைத்துப் படுத்த உயிர் 
இயற்கையில் கலந்து இலயமாகப் 
புயலான எண்ணங்கள் 
போன வழி எங்கே? 
பொன்றாக் கவிஞனாய்ப் 
பூரித்த பரவசத்தில் 
விளைத்திட்ட வீறாவேசம் 
வடிந்த வழி இதுதானோ? 
தரணியில் இதுவரையில் 
தாளாது நாமாற்றும் 
தொடர்கதையும் இதுவேயோ? 
தோன்றலுக்கும் மிச்சமிதோ? 
தோன்றும் உயிர் தொடரும் 
தீயுண்ணாத் திறல் எதுவோ? 

***

No comments:

Post a Comment