Tuesday, November 9, 2021

ஊரின் சலனம்

கிழக்கில் கொள்ளிடத்தில் 
கற்களிடை ஓடிவரும் ஆற்றைத் தாண்டி 
ஒரு சுடுகாடு 
சிதையில் பிணமெரியச் 
சித்தங் கலங்கி நண்பன் சமைந்து நிற்கச் 
சிவலோகப் பிராப்திக்குச் 
சீவன் புகைந்து எழ 
ஒன்றும் தோன்றாமல் 
வந்த வழி பார்த்தேன் 
நான் பார்த்த ஊர்தானா இது? 
ஏன் திடுதிப்பென்று மாறிவிட்டது? 
ஊருக்கென்று சில அவசரங்கள் 
உள்ளாடை மேல் போர்வை 
எல்லாம் உண்டு போலும் 
உடுத்துக் களையும் நேரங்கள் 
உற்றுப் பார்த்தால்தான் தெரிகிறது 
ஊரும் புரண்டு படுக்கும் 
சோம்பல் முறிக்கும் 
கொட்டாவி விடும் 
கைகள் தூக்கி நெட்டி முறிக்கும் 
சுருண்டு கிடக்கும் 
வாரிச் சுருட்டி எழுந்து 
விறுவிறு என்று எங்கோ போகும் 
எல்லாம் துல்லியமாகப் பார்க்கத் தவறினால் 
புலப்படாது போய்விடும் 
ஊர் அப்படியே அச்சடித்தது போல் 
இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் 
ஊர் என்றால் 
ஊரிலுள்ள மக்களைச் சொல்லவில்லை 
தெரியும் ஊரைத்தான் 

*** 

No comments:

Post a Comment