மூலப் பழங்கதையை
மூச்சில் உயிர் பெய்து மூண்ட நறுங்கவியை
மூட்டி வைத்து மூலக் கனலூட்டும்
வெப்பத்தை வாங்கி வைத்த வார்த்தைகளை
நினைவுப் பரணேற்றச் சொல்லேணி சாத்திச்
சாராத தத்துவத்தில் சமைந்து வரும்
சுயம்பாகச் சொக்கத் தழலெழுந்த
செம்பொற் கட்டுரைத்த சத்தியத்தை
மூளாத முத்தி முனைப்பில் முடிச்சிட்டு
முன்பரணில் போட்டு வைத்தேன்
முடிச்சொ பெரிதில்லை
மூச்சுக்கு அவிழ்ந்துவிடும்
நடக்குங்கால் நான் குனியுங்கால்
நால்வார்த்தை பேசுங்கால்
ஊடாடி நிற்குமோர் ஒளிப்பிழம்பாய்
நினைவுப் புரியவிழ்ந்து
நயமான ரஸவோட்டம்
நாடி உளம் கவ்வும்
இன்ப நாடியிலே தேனொலிக்கும்
மாடியிலே பெய்த மழை
வெண்கொடுங்கை வழியாக விரைவது போல்
ஆதியில் பெய்த அருள் வெள்ளச் சேதியில்
சென்மாந்திரக் கணக்கெல்லாம்
கரைந்து கருத்துருவாய்
வாக்கின் கொடுங்கை வழி
வாய்மொழியாய்க் கொட்டுங்கால்
வந்த வழி போன வழி
வரவிருக்கும் வாய்த்த வழி
எல்லாம் ஒரு வழியாய்
உருவெடுத்த மாயத்தில்
ஒற்றைக் கண் திறக்கக்
கற்றைக் கதிரின் வழி தெரிந்த காட்சியினில்
பரணேறிப் பார்க்குங்கால்
பாரெல்லாம் கவியுமருள் எழுந்து நிற்கும்
விரிவான் பறந்து வரும்
புள்ளெல்லாம் பரம்புனத்தில்
கவிக்கதிரின் மணி கொறிக்கும்
அரியாசனம் புதைந்த
அம்பொற் பதுமைகள் இசைத்த பண்ணில்
பரணில் வைத்த சொல்
பரத்தில் இவர்வான் முனைந்து
பூரணத்தில் மௌனமாகும்.
***
No comments:
Post a Comment