தெருவோர மண்டபத்தின் எதிரே
ஒற்றைச் சதுரமாய் அமைந்த தெப்பக் குளத்தில்
தாமரை மலர்கள் நாணும்
இலைகள் நீர்மேல்
உருண்ட முத்துக்குள்
ஒளிந்து வான் நோக்கும்
பச்சைக் கரும் பாசிக் குளம்
சாலையோரச் சுவரில் வெயிலுக்கஞ்சி
எதிர்க்கரையில் நிழற்குளுமை
ஒருக்களித்துப் படுத்திருக்கும்
வெயிலுக்கும் குளிர்நீர்க்கும்
விகிதமாய் அமிழ்ந்திருக்கும்
எருமையின் மேலெலும்பு முருட்டில்
சிற்றலகு தேய்த்துப் புன்சிறகைக்
கோதிவிட்டுக் கொள்ளும் சிறுபுள்
கூவக் குரல் கொடுக்கும் இணைப்புள்
எங்கோ மரப்பச்சை மையத்திருட்டில்
காகங்கள் கரைந்து கதிரவனை
மேலேற்றும் உச்சிப் பொழுதில்
குளத்தின் மறுகோடி மேற்கு படித்துறையில்
மூன்று பெண்கள் அமர்ந்து
முக்கால் கால்வழித்து
மூழ்கியெழக் குனியுங்கால் கண்டதனால்
மூண்ட சினமோ முகக் குறியோ
முன்னவளும் பின்னவளும் தாமமிழ
நடுவிருந்த பேதை
நயம் காட்டி வாராயோ என்றதனால்
கயம் படிந்த கதிரும் காலோய்ந்து
போம் திசையில் புறப்பட்டேன்
ஓமென்று ஒன்றும் பொருட்டு
***
No comments:
Post a Comment