ஆற்றைப் போல
அரசமரம் இருந்த இடம்
பேர்ந்த பின்பு
ஆற்றில் அங்கே சுழல் புகுந்தது
ஆளிழுத்துச் சொருகி வைத்து
ஆறுபேர் பலி இதுவரையில்
ஊரிலும் சுழல்கள் உண்டு
பெரிய குடும்பங்கள் வாழ்வற்றுப்
பெயர்ந்து விட்டால்
அங்குச் சுழலும் சதியும் பழியும்
பார்த்து நகாசாகப் போக வேண்டும்
பார்க்காமல் போனால் பண்பின் கேடு
பார்த்து நின்றிட்டால் பழியின் கேடு
பக்கத்தில் போனால் சதியின் நாற்றம்
பழகப் போனால் பாதகத் தோற்றம்
வெள்ளங்கள் வடிந்த வேதனை
வேர்களைப் புரட்டும்
புதுவெள்ளம் வந்து கரைகளை உடைக்கும்
மழைபெயல் பலவழி நீர்களைக் கலக்கும்
ஓடுகின்ற நீர் மூர்க்கம் கொள்ளும்
ஓரத்து மரங்களை அரித்துத் தள்ளும்
பெருங்குடும்பம் ஒன்று சரிந்த பள்ளம்
பார்த்து வாருங்கள்
மணல் காலைக் கீழ் அரிக்கும்.
***
No comments:
Post a Comment