Thursday, November 18, 2021

உள்ளத் தூய்மை

அழியத் தொடங்கிய உலகம் இதுதான் 
யாரைக் கேட்டோ அழிகிறது 
கிழியத் தொடங்கிய வானம் பாயாய்ச் 
சுருட்டத் தானோ முடிகிறது 
சுழித்தெழுந்த சுடலைத் தீயும் 
சுட்ட உடலைத் தந்திடுமோ? 
சுழித்தோடிச் சென்ற காற்றும் 
சுயமாய் அதனுள் மீண்டிடுமோ? 
அமைதி அமைதி என்றே சொல்லி 
ஆர்ப்பரித்தே உலகெங்கும் 
குமைந்து குமைந்து கூடித் தவமாய்க் 
கொடிய அழிவாம் பயிர்வளர்த்தார் 
உமையின் நாதன் ஊழிக்கூத்தே 
உவந்து புரிய உண்ணாழி 
அமைத்த அரங்காய் ஆக்கியிவ் வுலகை 
அழிவே கனிந்து விழச்செய்தார் 
உள்ளம் கனிந்த மோனம் நிலைத்து 
உண்மைக் கனலே சுடராமல் 
கள்ளம் கசிந்து கொள்ளை மிகுந்து 
குலவும் பொய்ம்மைப் புதர்க்காட்டில் 
விள்ளா அமைதி விளங்குக என்றால் 
விலவறச் சிரித்தற் கிடமன்றோ! 
உள்ளம் தூய்தாய்த் துலங்கினால் இங்கே 
உலகமே வாழத் தொடங்காதோ? 

***

No comments:

Post a Comment