Friday, February 26, 2016

மழை வருவதற்கான...

மழை வருவதற்கான முன்னேற்பாடுகள்
நடக்கின்றன.
உருள் இடிகள் சுருதி கூட்டி
மழை நாளங்களில் நிரவல்கள்
காற்றின் கமகங்கள்
கார்மேகக் குரல்வளையில் குமிழ்க்கின்றன. 
எண்ணில் அகலேற்றும் இயக்கத்தின் மின்னால்
தூநீர்ப் பைம்பொழிவின்
பசுந்தளிரின் நுனியில்
தொங்கும் உலகின்
ஒரு துளி வானும் மண்ணும்
கிருஷ்ணமாய்க் காண்பித்துக்
காற்றின் தீண்டலில்
கிளையில் ஒழுகிய நீரில்
நகராது மடிந்து சுருங்கிக் கரந்து
பின் விட்ட திசை வீழும் விச்ராந்தியில்
ஒரு புழு மண்ணில் விழுகிறது.
செடியிலேயே வாழ்வதற்கு
மண்ணில் புழங்கக்
கற்றுக் கொடுத்தது யார்?
பூர்வீகம் மண் எனினும்
புறப்பட்ட பின்னர்
புனர்ஜன்மம் ஆகத்தானோ? 
வெளிப்பட்ட பரிதியும்
விழுவதாய்க் கண்டதுவும்
விரிகின்ற மதியத்தின் வாழ்வைச் சுருக்கிச்
சுருண்டயரும் பசுந்தழையோ மேற்கில்
யந்திரங்கள் விரையும் ஒலிவேகங்கள்
ஆளற்ற பாதையில் அலறும் ஓலத்தூடு
அணுகவரும் உயிர்கள்
அவசரத்தின் தந்திகளில் சிக்கி
அலைமோதும் தலைதெறிப்பு. 
உச்சந்தலை வேர்த்து அரிக்கிறது.
ஏதோ ரகசியங்கள் பரிமாறப் போகின்றன.
மண்ணின் பொறுமையின்மை
இயங்கு திணையில் தெரிகிறது
விண்ணின் ஆற்றொழுக்காய்
விளங்கவரும் வீழ்ச்சி. 

***

No comments:

Post a Comment